திமுகவில் மூத்த தலைவர் மறைந்தார்! இதயத்தில் வேதனைத் தீ - ஸ்டாலின் குமுறல்!
stalin mourning for dmk senior leader rd Seethapathi
திமுகவின் சொத்து பாதுகாப்புக்குழு துணைத்தலைவரும், ஒருங்கிணைந்த சென்னை மாவட்ட கழக முன்னாள் செயலாளருமான ஆர்.டி.சீத்தாபதி அவர்களின் மறைவையொட்டி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார்.
மேலும் அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், " கழகத்தின் சொத்து பாதுகாப்பு குழு துணைத் தலைவரும், ஒருங்கிணைந்த சென்னை முன்னாள் மாவட்டச் செயலாளருமான திரு ஆர்.டி.சீத்தாபதி அவர்களின் மறைவுச் செய்தி - என் இதயத்தில் வேதனைத் தீயை மூட்டியிருக்கிறது.
கழக கொள்கை குன்றாக, தியாகத்தின் மறு உருவமாக, உழைப்பில் ஓய்வறியா தேனீயாக கழகப் பணியாற்றியவரை இன்றைக்கு இழந்து தவிக்கிறேன். அவரது உடலுக்கு நேரில் சென்று மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினேன்.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் சென்னை மாவட்டச் செயலாளர்களான என்.வி.நடராசன், கோவிந்தசாமி, கண்ணபிரான், மணிவண்ணன், கோ.செங்குட்டுவன், இளம்பரிதி, நீலநாராயணன் ஆகியோரைத் தொடர்ந்து மாவட்டச் செயலாளராகப் பணியாற்றியவர் ஆர்.டி.சீத்தாபதி அவர்கள்.
1974ஆம் ஆண்டு தொடங்கி, தொடர்ந்து இரண்டு முறை சென்னை மாவட்டச் செயலாளராகப் பொறுப்பேற்றுக் கழக வளர்ச்சிக்கு அரணாக விளங்கியவர்.
எப்படிப்பட்ட அடக்குமுறைகளையும் எதிர்த்து நின்று- கழக கூட்டங்களை, பேரணிகளை- தலைமைக் கழகம் அறிவிக்கும் போராட்டங்களை நடத்தி - கழக வளர்ச்சியில் சென்னையில் மிக முக்கியமான இடத்தைப் பிடித்தவர்.
இந்தியக் குடியரசுத் தலைவராக இருந்த இராஜேந்திரபிரசாத், பிரதமர் நேரு ஆகியோருக்கு எதிராக கறுப்புக் கொடி போராட்டம் - நடத்திய சென்னை மத்திய சிறையிலும் – பாளையங்கோட்டைச் சிறையிலுமாக ஓராண்டு காலம் மிசா சிறைவாசம் அனுபவித்தவர்.
தலைவர் கலைஞர் அவர்களின் பெயரிலான 2012 ஆம் ஆண்டு கலைஞர் விருது வழங்கி கவுரவிக்கப்பட்ட திரு ஆர்.டி.சீத்தாபதி அவர்களின் மறைவு, அவரது குடும்பத்திற்கு மட்டுமல்ல - திராவிட முன்னேற்றக் கழகம் என்ற ஒட்டுமொத்த குடும்பத்திற்கும் பேரிழப்பு" என தன்னுடைய இரங்கல் செய்தியில் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
English Summary
stalin mourning for dmk senior leader rd Seethapathi