கட்சி பொறுப்பாளர்களுடன் சீமான் தீவிர ஆலோசனை.!
SEEMAN MEET NTK MEMBERS
வரும் சட்டமன்ற பொது தேர்தல் களப்பணிகள் குறித்து, நாம் தமிழர் கட்சியின் தஞ்சை, நெல்லை, மதுரை மண்டல பொறுப்பாளர்களுடன், அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆலோசனை மேற்கொண்டார்.
இதுகுறித்து நாம் தமிழர் கட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "சட்டமன்றத் தேர்தல்-2021 வேட்பாளர்கள் தேர்வு மற்றும் களப்பணிகள் குறித்து அனைத்துநிலைப் பொறுப்பாளர்களுடன் கலந்தாய்வு மேற்கொள்வதற்காக சனவரி 22 முதல் 31 வரை, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மண்டலவாரியாக தஞ்சாவூர், திருநெல்வேலி, மதுரை, விழுப்புரம், சேலம், கோயம்புத்தூர், வேலூர் மற்றும் சென்னை ஆகிய இடங்களில் நடைபெற்றுவரும் கலந்தாய்வுக் கூட்டங்களில் பங்கேற்று வருகிறார்.
முதலாவதாக தஞ்சாவூர், புதுக்கோட்டை சாலையில் அமைந்துள்ள தமிழரசி திருமண மண்டபத்தில் 22-01-2021 அன்று மாலை 4 மணியளவில் திருச்சி, பெரம்பலூர், அரியலூர், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களைச் சேர்ந்த அனைத்துநிலைப் பொறுப்பாளர்களுடன் கலந்தாய்வு மேற்கொண்டார்.
இன்று 23-01-2021 காலை 10 மணியளவில் பாளையங்கோட்டை எல்.எஸ்.மகாலில் நடைபெற்ற தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களைச் சேர்ந்த அனைத்துநிலைப் பொறுப்பாளர்களுடன் கலந்தாய்வு மேற்கொண்டார்.
தொடர்ந்து மாலை 4 மணியளவில் மதுரை ஒத்தக்கடை, மேலூர் சாலையில் அமைந்துள்ள ஆர்.கே.திருமண மண்டபத்தில் நடைபெறவிருக்கும் திண்டுக்கல், சிவகங்கை, மதுரை, தேனி, விருதுநகர் மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்களைச் சேர்ந்த அனைத்துநிலைப் பொறுப்பாளர்களுடனான கலந்தாய்வில் பங்கேற்கவிருக்கிறார்." என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.