அதிமுகவுடன் கைகோர்க்கும் சவுக்கு சங்கர்... ஈரோடு கிழக்கில் திமுக கூட்டணிக்கு எதிராக பிரச்சாரம் செய்ய முடிவு..!
Savukku Sankar joining with AIADMK and campaign against DMK alliance
பிரபல யூடியூபரும் அரசியல் விமர்சகர்மான சவுக்கு சங்கர் திமுக மற்றும் பாஜகவுக்கு எதிரான நிலைப்பாட்டில் இருந்து வருகிறார். குறிப்பாக திமுக அரசு பொறுப்பேற்றதில் இருந்து பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்த இவர் நீதிபதிகளை விமர்சனம் செய்த வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். பின்னர் ஜாமீரில் வெளிவரும் பொழுது பழைய வழக்குகளால் கைது செய்யப்பட்டு மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்.
இதனை அடுத்து அனைத்து வழக்கில் இருந்தும் ஜாமினில் வெளியே வந்த சவுக்கு சங்கர் அரசியலில் ஈடுபட போவதாக அறிவித்தார். குறிப்பாக தமிழக சட்டமன்ற பொது தேர்தலில் தற்போதைய விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை எதிர்த்து களம் இறங்கப் போவதாக அறிவித்து இருந்தார். சவுக்கு சங்கரின் இந்த அறிவிப்பு அரசியல் வட்டாரத்தில் பேசும் பொருளானது. மேலும் திமுக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அங்கம் வகித்த ரெட் ஜெயன்ட் மூவிஸ் கடந்த பொங்கலுக்கு வெளியிட்ட வாரிசு மற்றும் துணிவு படம் சட்டத்திற்கு புறம்பாக நள்ளிரவில் திரையிடப்பட்டதாக லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் அளித்துள்ளார்.
இதனிடையே ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் திமுக கூட்டணிக்கு எதிராக அதிமுக சார்பில் பிரச்சாரம் மேற்கொள்ள சவுக்கு சங்கர் முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்பொழுது ஈரோடு சென்றுள்ள சவுக்கு சங்கர் இன்று நடைபெற்ற அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. இது குறித்தான அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை. எனினும் அதிமுகவின் பிரச்சாரக் குழு அல்லது நட்சத்திர பேச்சாளர் குறித்தான பட்டியலில் சவுக்கு சங்கர் பெயர் இடம் பெற வாய்ப்புள்ளதாக அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
English Summary
Savukku Sankar joining with AIADMK and campaign against DMK alliance