மக்களுக்கு நல்லது செய்ய திட்டம் ஒன்றை தீட்டி வருகிறேன் - சரத்குமார்!
Sarathkumar Say about people plan
மக்களுக்காக என்ன செய்ய வேண்டும், மக்களுக்கு எந்த திட்டத்தை செய்தால் அது சிறப்பாக இருக்கும் என்ற எண்ண ஓட்டத்தில் தான் இருப்பதாக, சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.
திருநெல்வேலி மாவட்டம், காவல்கிணறு பகுதியில் செய்தியாளர்களை சந்தித்த சரத்குமார் தெரிவிக்கையில், "மக்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்ற திட்டத்தை தீட்டிக் கொண்டிருக்கிறேன். மற்றவர்கள் போல அரசியல் செய்ய வேண்டும் என்றால் அது எனக்கு தேவையில்லை.
மக்களுக்காக என்ன செய்ய முடியும். எந்த திட்டத்தை வகுத்தால் அவர்களுக்கு சிறப்பாக இருக்கும் என்ற எண்ண ஓட்டத்தில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறேன். அந்த திட்டம் முழு வடிவம் பெறுவதற்கு ஒரு மாத காலமோ இரு மாத காலமோ ஆகலாம்.
மக்களுக்கு எது நல்லது, எதனால் நல்லது நடக்கும், மக்கள் சிறப்பாக வாழ்வதற்கு எதையெல்லாம் நீக்க வேண்டும், எதெல்லாம் இருக்க வேண்டும், எதையெல்லாம் சேர்க்க கோர்க்க வேண்டும் என்பதை இங்கே தெளிவாக விரைவில் சொல்கிறேன்" என்று சரத்குமார் தெரிவித்தார்.
முன்னதாக ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தால் தமிழகத்தில் பல இளைஞர்கள் தற்கொலை செய்து கொண்டிருக்கும் போது, அந்த ஆன்லைன் சூதாட்ட விளம்பரத்தில் சரத்குமார் நடிக்கவே கடும் கண்டனங்கள் எழுந்தது.
ஒரு அரசியல் கட்சித் தலைவராக இருக்கும் சரத்குமார், இப்படி ஒரு சூதாட்ட விளம்பரத்தில் நடிக்கலாமா? என்றும் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த சரத்குமார், அரசு தான் தடை செய்ய வேண்டும். அரசு தடை செய்தால் நான் ஏன் நடிக்க போகிறேன் என்று தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
Sarathkumar Say about people plan