காதலரைக் கரம் பிடித்த சாய்னா!
Saina married kaashyap
இந்தியாவின் முன்னணி பாட்மின்டன் வீராங்கனை சாய்னா நேவால், தன்னுடைய நீண்ட கால நண்பர் மற்றும் காதலரான சக பாட்மிண்டன் வீரர் பாருபள்ளி காஷ்யபை நேற்று திருமணம் செய்தார். தன்னுடைய திருமணப் புகைப்படங்களை ட்விட்டர், மற்றும் இன்ஸ்டாக்ராமில் அவர் பகிர்ந்திருந்தார்.
சாய்னா நேவால் இந்தியாவின் தலைசிறந்த பேட்மிண்டன் வீரர். இவர் இந்தியாவிற்காக பேட்மிண்ட்டன் போட்டிகளில் பதக்கம் வென்ற முதல் வீரர் ஆவார். 2012 ஆம் ஆண்டு நடந்த லண்டன் ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவின் சார்பில் விளையாடிய சாய்னா வெண்கலப்பதக்கம் வென்றார். இவருக்கு இந்திய அரசு அர்ஜுனா விருது, பத்ம ஸ்ரீ, பத்ம பூஷண் உள்ளிட்ட விருதுகளை வழங்கியுள்ளது. அதுமட்டுமல்லாது இந்தியாவில் விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதான் ராஜீவ் கேல் ரத்னா விருதையும் வழங்கி கௌரவபடுத்தியுள்ளது.
சாய்னா, தன்னுடைய திருமணப் புகைப்படத்தை நேற்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் அதில், "இதுவே என்னுடைய வாழ்வில் சிறந்த ஆட்டம்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
சாய்னாவும், பேட்மின்டன் வீரர் பாருபள்ளி காஷ்யபும் பல ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் இப்பொழுது பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் நடந்துள்ளது.
தன்னுடைய காதல் பயணம் பற்றி தெரிவித்துள்ள சாய்னா " நாங்கள் 2007-08 ஆம் ஆண்டு ஒரு டோர்னமென்ட் விளையாடும் போது அறிமுகமானோம். பல போட்டிகளில் ஒன்றாக விளையாடியுள்ளோம். நாங்கள் இருவரும் எப்பொழுதும் ஒன்றாகவே பயிற்சியில் ஈடுபடுவோம். நாங்கள் இருவரும் எங்கள் இருவரின் விளையாட்டிலும் மிகுந்த கவனம் செலுத்துவோம்.
போட்டிகளின் போது மிகுந்த நெருக்கடியும், அழுத்தமும் இருக்கும், இருந்தும் எங்கள் இடையே நெருக்கம் சாத்தியமானது. எங்கள் நட்பும் வளர்ந்தது. எப்பொழுதும் நாங்கள் திருமணம் குறித்து யோசித்தது இல்லை, போட்டியை வெல்ல வேண்டும் என்ற குறிக்கோளே எங்களுக்குள் நிறைந்து இருக்கும்.
எங்களின் பயணம் இணைந்தே இருந்தது. இதை எங்கள் பெற்றோரும் உணர்ந்துள்ளனர். அதனால், நாங்கள் எங்கள் விருப்பத்தை கூற வேண்டிய தேவையே இருக்கவில்லை. எங்கள் விருப்பத்தை புரிந்துக் கொண்ட அவர்கள் எங்கள் காதலைத் திருமணத்தில் இணைத்தனர்" என்றார்.
வரும் டிசம்பர் 20 ஆம் தேதியிலிருந்து ப்ரீமியர் பேட்மின்டன் லீக் தொடங்கவுள்ளது. அதற்கு பிறகு, டோக்யோ போட்டிகளுக்கான தகுதிப் போட்டிகள் தொடங்கவுள்ளன. இதனால், 16 ஆம் தேதி நடக்கவிருந்த திருமணம் முன் கூட்டியே நடத்தப்பட்டது.
இவர்களின் திருமண வரவேற்பு திட்டமிட்டபடி டிசம்பர் 16 அன்று ஹைதராபாத்தில் பிரம்மாண்டமாக நடைப்பெறும் என்றும், இதில் விளையாட்டு, அரசியல், தொழில் துறையைச் சேர்ந்த பல பிரபலங்கள் கலந்து கொள்வார்கள் எனத் தெரிகிறது.