தேவேந்திர குல வேளாளருக்கு 10% இட ஒதுக்கீடு வழங்குக..!! புதிய தமிழகம் கட்சி மாநாட்டில் தீர்மானம்..!!
Puthiya tamilagam Resolution 10% Reservation for Devendra kula velalar
விருதுநகர் மாவட்டத்தை அடுத்த ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே அழகாபுரியில் புதிய தமிழகம் கட்சியின் வெள்ளிவிழா மாநாடு நடைபெற்றது. இந்த மாநாடு புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி தலைமையில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் அதிமுக, பாஜக, பாமக உட்பட பல கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த மாநாட்டில் மொத்தம் 24 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. குறிப்பாக மத்திய அரசு அறிவித்த பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர் சாதி வகுப்பினருக்கான 10 சதவீத இட ஒதுக்கீட்டை வறட்டுப்பிடிவாதம் பிடிக்காமல் தமிழக அரசு அமல்படுத்திட வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும் தேவேந்திரகுல வேளாளர்களை பட்டியலினத்திலிருந்து விடுவித்து தமிழகத்தில் தனி பட்டியலிலும், மத்திய அரசின் இதர பிற்படுத்தப்பட்டோர் பொது பிரிவிலும் சேர்த்து மக்கள் தொகைக்கு ஏற்ப 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். சுயதொழில் முனைவோரின் தொழிலை விரிவுபடுத்த அவர்களுக்கு இலவச மின்சாரம், குறைந்த வட்டியில் மானியத்துடன் 15 லட்சம் ரூபாய் கடன் உதவி வழங்க வேண்டும்.
தமிழகத்தில் நெசவாளர்கள் நெசவு செய்யும் துணிகளை அரசே நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும். தமிழகத்தில் உயர்த்தப்பட்ட வரிகள் அனைத்தையும் உடனடியாக திரும்பப் பெற வேண்டும். மாதம் ஒரு முறை மின் கட்டணத்தை கணக்கீடு செய்ய வேண்டும். மத்திய உயர்கல்வி நிறுவனங்களை தென் தமிழகத்தில் அமைக்க வேண்டும். தமிழகத்தில் உள்ள கோயில்களின் நிலங்களை மீட்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் உட்பட 24 தீர்மானங்கள் புதிய தமிழகம் கட்சி மாநாட்டில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
English Summary
Puthiya tamilagam Resolution 10% Reservation for Devendra kula velalar