நான்கு மாசம் செல்போன் டவரில் ஏறி போராட்டம் செய்த நபர்.! கோரிக்கையை ஏற்றுக்கொண்ட மாநில அரசு.!
punjab man protest end
பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, சுமார் 130 நாட்களாக செல்போன் கோபுரத்தில் ஏறி போராடி வந்த ஆசிரியர் ஒருவரின் கோரிக்கையை, பஞ்சாப் மாநில அரசு ஏற்றுக் கொள்வதாக அறிவித்து, போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்துள்ளது.
பஞ்சாப் மாநிலத்தின் அரசு தொடக்கப் பள்ளிகளில் உள்ள ஆசிரியர் பணி காலியிடங்களை நிரப்புவதற்கு, இடிடி எனும் தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கான பயிற்சி முடித்தவர்களுக்கு முன்னுரிமை அளிப்பதாக பஞ்சாப் மாநில அரசு அண்மையில் அறிவித்தது.
இ.டி.டி (தொடக்க ஆசிரியர் பயிற்சி) மற்றும் ஆசிரியர் தகுதித் தேர்வு (டெட்) ஆகியவைகளில் தகுதியானவர்களுக்கே, அரசு தொடக்கப் பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணிக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்று பஞ்சாப் பள்ளிக் கல்வித் துறை அறிவித்திருந்தது. இதனை அமல்படுத்த பஞ்சாப் மாநில தொடக்கக் கல்வி குழு ’சி’ சேவைகளின் விதிகளில் திருத்தம் மேற்கொண்டு நடைமுறைக்கு வரும் என்று தெரிவித்து இருந்தது.
இந்நிலையில், காலியாக உள்ள ஆயிரத்து இருநூறு ஆசிரியர் பணியிடங்களையும் பயிற்சி முடித்த ஆசிரியர்களைக் கொண்டு நிரப்ப வேண்டும், உச்சபட்ச வயது வரம்பை 42 ஆக அதிகரிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி வேலையில்லாத ஆசிரியர்கள் போராட்டத்தில் குதித்தனர்.
இந்த போராட்டக்காரர்களில் ஒருவரான சுரேந்தர் பால் என்பவர் சுமார் 4 மாதங்களாக செல்போன் சிக்னல் கோபுரத்தின் மீது ஏறி போராட்டம் செய்து வந்தார்.
இந்த நிலையில், பஞ்சாப் மாநில அரசு போராட்டக்காரர்களின் கோரிக்கைகளை ஏற்றுக் கொள்வதாக அறிவித்தது. இதனையடுத்து அவர் தனது போராட்டத்தை முடித்துக் கொண்டார். மேலும் தீயணைப்புத் துறை மற்றும் காவல்துறை உதவியுடன் அந்த செல்போன் டவரில் இருந்து பத்திரமாக அவர் கீழே இறக்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.