சென்னை: டேங்கர் லாரியை வெடிக்க செய்து 500 பேரை கொலை செய்வேன்., மிரட்டிய ரவுடி 'கோழி' அருளை சுற்றிவளைத்த போலீசார்.!
police arrest kozhi arul
தென்காசியில் பிரபல ரவுடியான கோழி அருள் ஒரு ஆடியோ ஒன்றை வெளியிட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார். கேஸ் டேங்கர் லாரியை மோதி 500 பேரை கொலை செய்து, விட்டு நானும் சாவேன் என்று அந்த ஆடியோவில் அவர் தெரிவித்துள்ளார். இந்த ஆடியோ வைரலாக பரவியதை அடுத்து, போலீசாரால் அவரை அதிரடியாக கைது செய்துள்ளனர்.
தென்காசி மாவட்டம், பங்களா சுரண்டை ஊரை சேர்ந்தவர் கோழி அருள். இவர் மீது நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் பல்வேறு வழக்குகள் பதியப்பட்டுள்ளது. மேலும், சென்னையில் கொலை சம்பவங்களில் ஈடுபட்டு உள்ளதாகவும், இவர் மீது வழக்குகள் உள்ளது.
பிரபல ரவுடியாக கருதப்படும் கோழி அருள், பரபரப்பு ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த ஆடியோவில், "கொலை வழக்கில் உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடிக்க வேண்டும். எனக்கான ஆயுதம் கேஸ் சிலிண்டர் லாரி மட்டும்தான். எங்கு எதை கொளுத்த வேண்டும் என்று எனக்கு நன்றாக தெரியும்.
நான் இறந்தாலும் கவலைப்பட மாட்டேன். டேங்கர் லாரியை வெடிக்க வைத்து 500 பேரைக் கொன்றுவிட்டு தான், நானும் சாவேன்" என்று அந்த ஆடியோவில் தெரிவித்துள்ளார். மேலும், டிஜிபிக்கு சவால் விடும் வகையில் இவர் வெளியிட்ட ஆடியோ மேலும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனையடுத்து கோழி அருளைப் பிடிக்க நெல்லை தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில், அம்பத்தூர் எஸ்டேட் அத்திப்பட்டி தனது சித்தப்பா மகன் தினகரன் வீட்டில் கோழி அருள் தங்கியிருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதனையடுத்து போலீசார் அந்த வீட்டை சுற்றி வளைத்து கோழி அருளை கைது செய்தனர். பின்னர் உதவி கமிஷனர் அலுவலகத்தில் வைத்து அவரிடம் தீவிர விசாரணை நடத்தியதில் பல்வேறு தகவல்கள் வெளிவந்துள்ளது.
பல்வேறு காவல் நிலையங்களில் கோழி அருள் மீது 10க்கும் மேற்பட்ட கொலை வழக்குகள் பதியப்பட்டுள்ளது. தற்போது, கோழி அருளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.