#Breaking சாதித்தார் டாக்டர் ராமதாஸ்! வன்னியர் இட ஒதுக்கீடு அறிவிப்பை வெளியிட்டார் முதல்வர் பழனிசாமி!
PMK Demnad accepted by TN Govt announced inner reservation for Vanniyars in MBC
பாமக, வன்னியர் சங்கத்தின் தொடர் போராட்டத்தின் காரணமாகவும், டாக்டர் ராமதாஸின் விடா முயற்சியின் காரணமாகவும் கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் வன்னியர்களுக்கு 20% தனி இட ஒதுக்கீடு பெற்றுத் தருவதன் மூலம் தான், அவர்களின் வாழ்க்கை நிலையை முன்னேற்ற முடியும் என தனது அரசியல் பயணத்தை தொடங்கிய மருத்துவர் இராமதாஸ், கடந்த 40 ஆண்டுகளாக தொடர்ந்து போராடி வருகிறார்.
1980-ஆம் ஆண்டு முதல் 1989-ஆம் ஆண்டு வரை 10 ஆண்டுகள் தொடர் போராட்டம் நடத்தி, 21 உயிர்களை தியாகம் செய்த வன்னியர்களுக்கு மட்டுமே வழங்கப்பட வேண்டிய 20% இட ஒதுக்கீட்டை 108 சாதிகளுக்கு பகிர்ந்து வழங்கியது தான் தமிழ்நாட்டில் இன்று நடைபெறும் சமூகநீதி சூறையாடல்களுக்கு காரணம் என்று மருத்துவர் இராமதாஸ் தெரிவித்து வருகிறார்.
இந்த நிலையை மாற்றுவதற்காக கல்வி - வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 20% தனி ஒதுக்கீடு கோரி தொடர் போராட்டங்களை மருத்துவர் இராமதாஸ் அறிவித்தார். கடந்த ஆண்டு டிசம்பர் ஒன்றாம் தேதி முதல் இறுதியாக நடைபெற்ற ஜனவரி 29 ஆம் தேதி வரையிலான போராட்டம் வரை மொத்தம் 9 நாட்களுக்கு 6 கட்டங்களாக பல்வேறு போராட்டங்களை பாட்டாளி மக்கள் கட்சியும், வன்னியர் சங்கமும் இணைந்து நடத்தியுள்ளன. பாட்டாளி மக்கள் கட்சியின் போராட்டத்தைத் தொடர்ந்து தமிழக அரசுக்கும், பாட்டாளி மக்கள் கட்சிக்கும் இடையே பல கட்ட பேச்சு வார்த்தைகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், இறுதிக்கட்டமாக வன்னியர் இடப்பங்கீடு குறித்து பிப்ரவரி 3 பாமகவுடன் தமிழக அரசு பேச்சு வார்த்தை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்குவது குறித்து தமிழக அமைச்சர்கள் குழுவுடன், பாமக இட ஒதுக்கீடு போராட்ட குழு, சென்னை பசுமை வழி சாலையில் உள்ள மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி இல்லத்தில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்கள். பாமக உடன் நடத்திய பேச்சுவார்த்தைக்கு பிறகு, அதன் விவரங்களை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடமும், தமிழக துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வத்தையும், அமைச்சர்கள் குழு சந்தித்து தெரிவித்தனர்.
அதன் பிறகு இருபுறமும் அமைதி நிலவி வந்த வேளையில், தற்போது சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்றுவருவதால் அதில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டிருந்தது. கூட்டத்தொடர் நாளை முடிவடைய உள்ள நிலையில் அறிவிப்பு வெளியாகவில்லை.
இதனிடையே இந்திய தலைமை தேர்தல் ஆணையர் இன்று மாலை 4.30 மணிக்கு செய்தியாளர் சந்திக்க இருக்கிறார் என்ற அறிவிப்பு வெளியாகியது. அப்போது தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களின் தேர்தல் தேதி குறித்து அறிவிப்பு வெளியாக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. தேர்தல் அறிவிப்பு வந்துவிட்டால் புதிய அறிவிப்புகள் எதுவும் அறிவிக்க முடியாது என்பதால், அதற்கு முன்னதாக வன்னியர் தனி இட ஒதுக்கீடு வருமா என்ற எதிர்பார்ப்பு எகிறியது.
இந்த நிலையில், மதியம் 2.30 மணிக்கு தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை அமைச்சர்களுடன் முதல்வர் பழனிசாமி சந்திக்கிறார் என்ற தகவலானது வெளியாகியது. அப்போது வன்னியர் இட ஒதுக்கீடு அறிவிப்பு வருமா என்ற எதிர்பார்ப்பு உருவாகியது. இந்த நிலையில் மீண்டும் சட்டசபை 3 மணிக்கு கூடுவதாக அறிவிக்கப்பட்டது, அதன்படி கூட்டம் கூடியதும் வன்னியர்களுக்கான தனி இடஒதுக்கீடு சட்ட முன்வடிவு பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது.
MBC யில் 10.5 % உள்ஒதுக்கீடு வழங்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. மொத்தமாக 20 % தனி இட ஒதுக்கீடு கேட்ட வன்னியர்களுக்கு, தற்போது அமலில் இருக்கும் 69 % இட ஒதுக்கீட்டின் படி10.5 % என்பது பாமக போராட்டத்திற்கு வெற்றியாகவே பார்க்க வேண்டும். வன்னியர்களுக்கு இட ஒதுக்கீட்டில் உறுதியாக இருந்த டாக்டர் ராமதாஸின் போராட்டத்திற்கு கிடைத்த உண்மையான வெற்றியாகவே இந்த அறிவிப்பு பார்க்கப்படுகிறது.
English Summary
PMK Demnad accepted by TN Govt announced inner reservation for Vanniyars in MBC