பாட்டாளிகளே, கூட்டணி கட்சியினரே கவலைப்பட வேண்டாம் - டாக்டர் ராமதாஸ்!
pmk chief dr ramadoss thanks to tamilnadu people
மக்களவைத் தேர்தல் முடிவுகளை பாமக ஏற்கிறது, இந்த முடிவினை வழங்கிய தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றி என பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் 38 மக்களவை தொகுதிகளுக்கும், 22 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதிமுக தலைமையில் பா.ம.க. உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்ற கூட்டணிக்கு எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி கிடைக்கவில்லை.
தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் முடிவுக்கு பல காரணங்கள் உள்ளன. அவை என்னவாக இருந்தாலும், மக்களின் தீர்ப்பே இறுதியானது என்ற அடிப்படையில் இந்தத் தேர்தல் முடிவுகளை பாட்டாளி மக்கள் கட்சி ஏற்றுக் கொள்கிறது. பாட்டாளி மக்கள் கட்சி தேர்தல் போரில் தோற்றாலும், களத்தை இழக்க வில்லை. தோல்விக்கான காரணங்களை ஆராய்ந்து, சரி செய்து அடுத்து வரும் தேர்தலில் வெற்றி பெறுவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும். மக்களவைத் தேர்தல் முடிவுகளை எண்ணி பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் கூட்டணியினர் கவலைப்பட வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்.
அதேநேரத்தில் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் அதிமுக 9 இடங்களில் வெற்றி பெற்று, தமிழகத்தில் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை தொடர்ந்து நடத்த தமிழக மக்களின் தீர்ப்பைப் பெற்றிருக்கிறது. மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டுள்ள பிரதமர் மாண்புமிகு நரேந்திர மோடி, முதலமைச்சர் மாண்புமிகு எடப்பாடி பழனிச்சாமி ஆகியோருக்கு பாமக சார்பில் வாழ்த்துகள்.
மக்களவைத் தேர்தலிலும், சட்டப்பேரவை இடைத் தேர்தல்களிலும் அதிமுக தலைமையிலான அணிக்கு வாக்களித்த மக்களுக்கும், பணியாற்றிய அதிமுக, பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் அனைத்துக் கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள், தொண்டர்களுக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்" என கூறியுள்ளார்.
English Summary
pmk chief dr ramadoss thanks to tamilnadu people