கொரோனா தீவிரம்! அன்புமணியை அழைத்த பிரதமர் மோடி!
PM Modi called anbumani MP for corona
மருத்துவர் அன்புமணி இராமதாஸ் உடன் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் பேசினார் என்றும் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை கேட்டார் எனவும் பாமக தலைமை நிலைய செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாமக தலைமை வெளியிட்ட செய்தியானது, "பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணித் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்களை மாண்புமிகு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் இன்று மாலை தொலைப்பேசி மூலம் தொடர்பு கொண்டு பேசினார். அவரது உடல் நலன் குறித்தும், மருத்துவர் அய்யா அவர்களின் உடல் நலன் குறித்து மிகுந்த அக்கறையுடன் விசாரித்தார். மருத்துவர் அய்யா அவர்களின் உடல்நலனை நன்றாக கவனித்துக் கொள்ளும்படியும் பிரதமர் அவர்கள் அறிவுறுத்தினார்.
தொடர்ந்து இந்தியாவில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விளக்கிய நரேந்திர மோடி அவர்கள், அரசின் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு தரும்படியும் கேட்டுக் கொண்டார். அதைக் கேட்ட மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள், இந்தியாவின் பிரதமர் என்ற முறையில் கொரோனா பரவலைத் தடுப்பதற்காக துணிச்சலான நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும், இந்தியா வலிமையான தலைமையின் கீழ் செயல்பட்டு வருவதை பிரதமரின் நடவடிக்கைகள் உணர்த்துவதாகவும் பாராட்டினார்.
கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளுக்கு பா.ம.க. முழுமையான ஆதரவை வழங்கும் என்றும் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் உறுதியளித்தார். அதைக்கேட்ட பிரதமர் நரேந்திர மோடி அவர்கள், ஒரு மருத்துவர் என்ற முறையில் அரசின் நடவடிக்கைகளை மருத்துவர் அன்புமணி இராமதாஸ் நன்றாக புரிந்து கொண்டிருப்பதாக குறிப்பிட்டார். இந்த விஷயத்தில் அரசு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பான யோசனைகளை வழங்கும்படியும் கேட்டுக் கொண்டார். அதை ஏற்றுக் கொண்ட மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள், பாட்டாளி மக்கள் கட்சியின் யோசனைகளை எழுத்து வடிவில் பிரதமருக்கு அனுப்புவதாகவும் உறுதியளித்தார்." என அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
PM Modi called anbumani MP for corona