ஸ்டாலினை புகழ்ந்த அரசகுமார் மீண்டும் பரபரப்பு பேட்டி! ஒரே நாளில் தமிழகத்தில் வைரலான வீடியோ!
P T Arasakumar Press meet in Chennai airport
திமுக தலைவர் ஸ்டாலினை நான் சாதரணமாகத்தான் புகழ்ந்து பேசினேன். இந்த விவாகரத்தில் பா.ஜ.க எந்த நடவடிக்கை எடுத்தாலும் அதனை ஏற்கத் தயார் என அரசகுமார் தெரிவித்துள்ளார்.
இன்று சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பா.ஜ.க மாநில துணைத் தலைவர் பிடி அரசகுமார், "புதுக்கோட்டையில் நடந்த திமுக நிர்வாகி பெரியண்ணன் அரசு இல்ல திருமண விழாவில் கலந்துக் கொண்டேன். அந்த திருமணத்தை தி.மு.க தலைவர் ஸ்டாலின் நடத்தி வைத்தார். திருமண விழாவில் கலந்து கொண்ட என்னை பேச அழைத்தனர். அங்கு நான் யதார்த்தமாகப் பேசினேன். எதையுமே திட்டமிட்டு பேசவில்லை. ஜனநாயக ரீதியில் முதலமைச்சராக வேண்டும் என்று விரும்புகிறார். ஜனநாயக ரீதியில் முதலமைச்சர் ஆக வாழ்த்துக்கள் என்று தான் சொன்னேன். அடுத்து அவர் தான் முதலமைச்சர் என்று நான் சொல்லவில்லை.
என் தனிப்பட்ட உணர்வுகளை தான் வெளிப்படுத்தினேன். இது பா.ஜ.க. கட்சியின் குரலாகவோ வார்த்தைகளாகவோ வெளியிடவில்லை எனவும், மேலும் ஸ்டாலின் எங்கு பார்த்தாலும் நலம் விசாரிப்பார். 20 ஆண்டுகளாக அரசியலில் பயணிக்கிறேன். திருமண வீட்டில் காலங்கள் கனியும் காத்திருங்கள் காரியங்கள் நடக்கும் என்று சொன்னதை சிலர் அடுத்து ஸ்டாலின் முதல்வர் என்றும் தி.மு.கவிற்கு ஆதரவாக பேசியதாகவும் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி விட்டனர். நான் சாதாரணமாக தான் சொன்னேன்.
பா.ஜ.க.விற்கும் தி.மு.கவிற்கும் கொள்கை ரீதியான மிகப்பெரிய மாறுப்பட்ட கருத்து, சிந்தனை உண்டு. பா.ஜ.க.வை ஆட்சியில் அமர்த்த வேண்டும் என்பதற்காக தான் உழைத்து கொண்டு இருக்கிறோம். கட்சியின் நிர்வாகியாக இருந்து கொண்டு வேறு கட்சி ஆட்சிக்கு வர வேண்டும் என்று சொல்லவில்லை. மு.க.ஸ்டாலின் ஜனநாயக ரீதியாக ஆட்சி அமைக்க காத்திருக்கிறார். காலம் வரும்போது காரியம் நடக்கும் என்று தான் சொன்னேன் என விளக்கம் அளித்துள்ளார்.
12 ஆண்டுகளுக்கு முன்னாள் ஒருவிழாவில் மு.க.ஸ்டாலினை புகழ்ந்து ஆழகாக இருப்பதாக சொன்னேன். இன்னும் அழகு குறையாமல் இருக்கிறீர்கள். நான் ரசித்த தலைவர்களிலேயே அழகை பார்த்து ரசித்தது எம்.ஜி.ஆருக்கு பின் உங்களை என்று சொன்னேன். இது என் தனிப்பட்ட கருத்து. மு.க.ஸ்டாலினைப் பற்றி சொல்ல வேண்டும் என்று மனதில் தோன்றியதால் சொன்னேன்.
ஆட்சி மாற்றம் என்ற அடிப்படையில் எதுவும் சொல்லவில்லை. ஒரு திருமண வீட்டின் மேடையில் அந்த தலைவர் இருந்ததால் பேசினேன். இது கூட்டணி கட்சிக்கு எதிராகவோ பிரச்சனையாகவோ ஆகும் என எதிர்ப்பார்க்கவில்லை. சிந்திக்கவும் இல்லை. அந்த மாதிரி எண்ணத்தில் பேசவில்லை. என்னுடைய பணிகளில் பாஜக பொருளாளர் சேகருக்கு வருத்தம் இருக்குமோ என தெரியவில்லை.
தலைவராக மோடியை ஏற்றுக் கொண்டு உழைக்கும் தலைவர்களில் நானும் ஒருவனாக உள்ளேன். மேலும் திமுகவில் இருந்தேன் என்று தான் கூறினேன். திமுக வீட்டு திருமண விழாவில் ஒரு வாழ்த்து சொன்னதில் என்ன தவறு இருக்கிறது என்று தெரியவில்லை. நான் நினைத்தால் மு.க.ஸ்டாலின் முதல்வராகிவிட முடியுமா? பா.ஜ.க தலைமை எந்த முடிவு எடுத்தாலும் ஏற்க தயாராக இருக்கிறேன்" என கூறியுள்ளார்.
English Summary
P T Arasakumar Press meet in Chennai airport