'கைப் புண்ணுக்கு கண்ணாடி எதற்கு?' என்பதுபோல நீட் ரத்துக்கு குழு எதற்கு? வெளியான பரபரப்பு அறிக்கை.!!
ops statement on june 16
நீட் தேர்வை ரத்து செய்வது தொடர்பாக திமுக அளித்த தேர்தல் வாக்குறுதி குறித்து அனைத்திந்தியஅண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் அறிக்கை வெளியிட்டார்.
நீட் தேர்வை ரத்து செய்ய முதல் சட்டப் பேரவைக் கூட்டத் தொடரிலேயே சட்டம் இயற்றப்படும்' என்று தேர்தல் வாக்குறுதி அளித்து விட்டு, ஆட்சிக்கு வந்து ஒரு மாதம் கழித்து அதற்கு ஒரு குழுவை நியமித்து, அந்தக் குழு அறிக்கை அளிக்க ஒரு மாத கால அவகாசம் அளித்திருப்பது துரிதமான நடவடிக்கை அல்ல, மாறாக காலந்தாழ்த்தும் செயல்.
பன்னிரெண்டாம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் மருத்துவக் கல்வி சேர்க்கை அமையப்பெற வேண்டும் என்பதும், 'நீட்' தேர்வு உட்பட அனைத்து நுழைவுத் தேர்வுகளையும் ரத்து செய்ய வேண்டும் என்பதும் தான் தமிழ்நாட்டிலுள்ள அனைத்து அரசியல் கட்சிகளின் நிலைப்பாடு. 2011 ஆம் ஆண்டு நுழைவுத் தேர்வுக்கு மத்திய அரசு அடித்தளம் இட்டபோதே, அதனை உறுதியோடு எதிர்த்தவர் மாண்புமிகு இதயதெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்கள். இதற்குக் காரணம் என்னவென்றால், கிராமப்புற மாணவர்களும், மிகவும் பின்தங்கிய சமூகப் பொருளாதார பின்னணியைக் கொண்ட மாணவர்களும் நகர்ப்புற மாணவர்களுடன் இணைந்து 'நீட்' உட்பட பொது நுழைவுத் தேர்வினை எதிர்கொள்ள முடியாதது; 'நீட்' தேர்வை எதிர்கொள்ளத் தேவையான பயிற்சி மையங்கள் கிராமப்புறங்களிலே இல்லாதது; பயிற்சி மையங்களுக்கு சென்று பயிலும் அளவிற்கு பண வசதியின்மை; பெரும்பாலான ஏழை, எளிய கிராமப்புற மாணவர்கள் மாநில அரசுப் பள்ளிகளில் பயில்வதால், அவர்களுடைய பாடத் திட்டங்களும், 'நீட்' தேர்விற்கான பாடத்திட்டங்களும் சமமாக இல்லாதது; தமிழ்நாட்டில் சுமுகமாக நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் 69 விழுக்காடு இடஒதுக்கீட்டில் 'நீட்' போன்ற பொது நுழைவுத் தேர்வுகள் குழப்பத்தை விளைவிப்பது ஆகியவை தான். இது தவிர, கிராமப்புற மாணவர்கள் மருத்துவக் கல்வியை படித்தால்தான் கிராமப்புறங்களுக்குத் தேவையான மருத்துவச் சேவை பூர்த்தி செய்யப்படும் என்பதும் 'நீட்' தேர்வு ரத்து செய்யப்பட வேண்டும் என்பதற்கு ஒரு முக்கியக் காரணம்.
இந்தச் சூழ்நிலையில், 'நீட்' தேர்வை ரத்து செய்வதற்கு நம்முன் உள்ள ஒரே சட்டப்பூர்வமான நடவடிக்கை, அதற்கான சட்டத்தை தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் இயற்றி மேதகு இந்தியக் குடியாசுத் தலைவர் அவர்களின் ஒப்புதலைப் பெறுவதுதான். இதன் அடிப்படையில்தான், 2017 ஆம் ஆண்டு தமிழ்நாடு மருத்துவ அறிவியல் இளநிலை மற்றும் பல் மருத்துவ இளநிலை படிப்புகள் சேர்க்கைக்கான சட்டமுன்வடிவு மற்றும் 2017 ஆம் ஆண்டு தமிழ்நாடு மருத்துவம் மற்றும் பல் மருத்துவத்தில் முதுநிலைப் பட்டப் படிப்புகளுக்கான சேர்க்கைச் சட்டமுன்வடிவு ஆகியவை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசால் 1-2-2017 அன்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டு மேதகு இந்தியக் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக மத்திய அரசிற்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்தச் சட்டமுன்வடிவுகளின்மீது தி.மு.க. சார்பில் பேசியபோது, "நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்பட்டதன் விளைவாக கிராமப்புற மாணவர்களும், தமிழ்வழி பயில்கின்ற மாணவர்களும், பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களும் மருத்துவக் சுல்லூரியிலேயும், பொறியியல் கல்லூரியிலேயும் இடம் பெறுகின்ற வாய்ப்பை உருவாக்கித் தந்தது என்பது உண்மை” என்ற கருத்து பதிவு செய்யப்பட்டது. இதற்கேற்ப சட்ட நடவடிக்கையை எடுக்காமல், மருத்துவச் சேர்க்கையில் 'நீட்' தேர்வின் தாக்கம் குறித்து ஆராய குழு அமைத்திருப்பது என்பது தாமதப்படுத்தும் செயல்.
நீட்! தேர்வினால் கிராமப்புற, நகர்ப்புற ஏழையெளிய மாணவர்கள், போன்ற சமுதாயத்தில் பின்தங்கிய நிலையில் உள்ள மாணவர்களுக்கு சுடந்த சில ஆண்டுகளாக மருத்துவக் கல்வி பயிலும் வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளதாக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களே அறிவித்துவிட்டு, 'நீட் தேர்வின் தாக்கம் குறித்து ஆராய குழு அமைப்பது என்பது, அவருடை அறிவிப்பிலேயே அவருக்கு சந்தேகம் இருக்கிறதோ என்ற எண்ணம் மாணவர்கள் மத்தியில் நிலவுகிறது. 2006 ஆம் ஆண்டிலேயே வல்லுநர் குழு இதுகுறித்து ஆராய்ந்து, அதன் அடிப்படையில் நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்பட்ட நிலையில் மீண்டும் குழு அமைப்பது என்பது 'அரைத்த மாவையே அரைப்பது' போலாகும்.
'கைப் புண்ணுக்கு கண்ணாடி எதற்கு?' என்பதுபோல நீட், ரத்துக்கு குழு எதற்கு?' என்பதுதான் எல்லோரின் கருத்தாக இருக்கிறது என்பதை எடுத்துரைக்கும் இந்தத் தருணத்தில், தேர்தல் அறிக்கையில் தெரிவித்ததற்கிணங்க முதல் சட்டமன்றக் கூட்டத் தொடரிலேயே 'நீட்' தேர்வு ரத்து குறித்த சட்டத்தை நிறைவேற்றி, மேதகு இந்தியக் குடியாசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற நடவடிக்கை எடுக்குமாறு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களை கேட்டுக் கொள்கிறேன்.
இதுமட்டுமல்லாமல், மாண்புமிகு இந்தியப் பிரதமர் அவர்களை நேரில் சந்திக்கும்போது, இதுகுறித்து விரிவாக எடுத்துரைத்து, 'நீட்' தேர்வை அகில இந்திய அளவில் ரத்து செய்ய அழுத்தம் அளிக்குமாறும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களைக் கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.