வெளியான மரண செய்தி., மிகுந்த வருத்தத்தில் ஓபிஎஸ், இபிஎஸ்.!
ops eps morning to pulamai pithan
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி K. பழனிசாமி ஆகியோர் இன்று கூட்டாக வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,
"அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக முன்னாள் அவைத் தலைவர் புலவர் புலமைப்பித்தன் அவர்கள் உடல்நலக் குறைவால் மரணமடைந்துவிட்டார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றோம்.
தமிழ் நாடு சட்டமன்ற மேலவையின் துணைத் தலைவராகப் பணியாற்றிய புலவர் புலமைப்பித்தன் அவர்கள், கழக நிறுவனத் தலைவர், புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். அவர்களின் பேரன்பைப் பெற்றவர்.
புரட்சித் தலைவரால் தமிழ் நாடு அரசவைக் கவிஞராக நியமிக்கப்பட்டு தமிழ்த் தொண்டு ஆற்றியவர். கோவை மாவட்டத்தில், ஒரு பள்ளியில் தமிழாசிரியராக தனது வாழ்வைத் தொடங்கிய புலவர் புலமைப்பித்தன் அவர்கள், தமிழ்த் திரை உலகில் 1968 முதல் 'குடியிருந்த கோயில்', 'அடிமைப்பெண்', 'நல்ல நேரம்', 'இதயக்கனி', 'மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்', 'எங்கம்மா மகாராணி', 'உலகம் சுற்றும் வாலிபன்' போன்ற எண்ணற்ற திரைப்படங்களுக்கு காலத்தால் அழியாத பாடல்களை எழுதி புகழ்பெற்றவர்.
கழக நிரந்தரப் பொதுச் செயலாளர், இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்களால், கழக இலக்கிய அணிச் செயலாளராகவும், பின்னர் கழக அவைத் தலைவராகவும் நியமிக்கப்பட்டு பணியாற்றிய புலவர் புலமைப்பித்தன் அவர்கள் இயற்றிய 'வாசலிலே இரட்டை இலை கோலமிடுங்கள்' போன்ற மனதைத் தொடும் எண்ணற்ற கழக கொள்கை விளக்கப் பாடல்கள் நாடாளுமன்ற, சட்டமன்றப் பொதுத் தேர்தல் பிரச்சாரங்களின் போது தமிழ்நாடெங்கும் ஒலித்தன.
இத்தகைய சிறப்புக்குரிய அண்ணன் புலவர் புலமைப்பித்தன் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எங்களது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறோம். அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறோம்." என்று அந்த இரங்கல் செய்தியில் ஓபிஎஸ், இபிஎஸ் தெரிவித்துள்ளனர்.
English Summary
ops eps morning to pulamai pithan