புதிய பாராளுமன்ற கட்டிடத்திற்கு அண்ணல் அம்பேத்கர் பெயர் - தமிழகத்தில் முதல் குரல்!
new parliament building SEEMAN
சென்னை கிண்டியில் செய்தியாளர்களை சந்தித்து சீமான் தெரிவித்தாவது, "இன்றைக்கு இந்திய ஒன்றிய அரசு, புதிய பாராளுமன்ற கட்டிடத்தைக் கட்ட வேண்டும் என்று முயற்சிக்கிறது. அதற்கு, இந்திய அரசியல் சாசனத்தை வகுத்துக் கொடுத்த அறிவாசான் அண்ணல் அம்பேத்கர் அவர்களினுடையப் பெயரை வைக்க வேண்டும். இந்த நிலப்பரப்பைக் கடந்து உலக நாடுகளுக்குப் பயணிக்கும்போது, இந்தியாவிற்கே இரண்டு நபர்கள் தான் அடையாளம், ஒன்று அண்ணல் காந்தியடிகள் மற்றொன்று புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் அவர்கள் தான்.
“தமிழ்நாட்டில் திமுக அரசு, ஆர்.எஸ்.எஸ் பயிற்சி நடத்துவதற்கும், ‘சாகா’ வகுப்புகள் நடத்துவதற்கும் அனுமதி கொடுத்திருக்கிறது. அதற்கு நன்றிக் கடனாக அவர்கள், ‘கலைஞரின் பேனா’ நினைவுச் சின்னத்தை கடலில் அமைக்க அனுமதி கொடுத்திருக்கிறார்கள். பசியின் கொடுமையால் காலை உணவும் அளிக்கும் நிலையில், எம் மக்களின் வறுமை இருக்கிறது. இந்தச் சூழலில், கலைஞருக்கு 39 கோடியில் சமாதி கட்டுவது, 80 கோடியில் கடலுக்கு நடுவே ‘கலைஞரின் பேனா’ நினைவு சின்னம் அமைப்பது என்பதெல்லாம் அதிகாரத்திமிரின் உச்சம்” என்று கூறினார்.
“குழந்தைகளுக்கு காலை உணவளிக்கும் திட்டத்தை நான் வரவேற்கிறேன். ஆனால், அதை அரசியல் இலாபங்களுக்காக, வாக்கு வேட்டைக்காக செய்வதை நான் வெறுக்கிறேன். ஐயா காமராசர் அவர்கள் மதிய உணவு திட்டத்தை உளமார செய்தார். குழந்தைக்கு உணவு ஊட்டுவதுப் போன்று படமெடுத்தப் பிறகு, சாப்பாட்டுடன் தட்டிலேயே கையைக் கழுவுகிறார், முதல்வர் அவர்கள். அதெல்லாம் தான் ‘திராவிட மாடல்’.
“நேற்று ஐயா பெரியாரின் பிறந்த நாளைக் கொண்டாடும் திராவிட இயக்கத்தினர் யாராவது, அண்ணன் ஆ.ராசா அவர்களுடைய கருத்தை ஆதரித்து பேசியுள்ளார்களா? அயோத்திதாசப் பண்டிதர், இரட்டைமலை சீனிவாசனாரின் பேரன்கள் நாங்கள் அண்ணன் ஆ.ராசாவை விட்டுவிட்டு போகமாட்டோம் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்” என்று ஆ.ராசாவை ஆதரித்துப் பேசினார். “மோடியே திராவிடர் தான் என்று ஹெச். ராஜா பேசுவதன் மூலம் திராவிடம் என்பது எவ்வளவு கேவலமாக உள்ளது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்” என்று சீமான் தெரிவித்தார்.
English Summary
new parliament building SEEMAN