இந்தியர்கள் இல்லை என அறிவிக்கப்பட்ட 19 இலட்சம் மக்கள்! இறுதி பட்டியல் வெளியானதால் பரபரப்பு!
national register of citizens in assam final list
அசாமில் இருக்கும் மக்களுக்கு இந்திய குடியுரிமையை உறுதி செய்யும், தேசிய குடிமக்கள் பதிவேடு இறுதிப்பட்டியல் இன்று வெளியாகியுள்ளது. கடந்த முறை வெளியாகிய பட்டியலில் அங்கு விண்ணப்பித்த மூன்று கோடியே 29 லட்சம் பேரில் 2 கோடியே 90 லட்சம் பேரின் பெயர்கள் மட்டுமே வரைவுப் பட்டியலில் இடம் பெற்றிருந்தது. இதனையடுத்து அங்கு விடுபட்ட பலரும் தங்கள் பெயரையும் சேர்க்க வேண்டும் என மீண்டும் விண்ணப்பங்களை அளித்தனர்.
வங்கதேசத்தில் இருந்து இந்தியாவிற்கு சட்டவிரோதமாக குடியேறியவர்களை அடையாளம் காணும் விதமாக தேசிய குடிமக்கள் பதிவு பட்டியல் தயாரிக்கப்பட்டது. அவ்வாறு தயாரிக்கப்பட்ட வரைவுப் பட்டியலில் அசாமில் வாழும் மக்களில் 41 லட்சம் பேர் விடுபட்டனர். இதனால் அங்கு வாழும் 41 லட்சம் மக்களும் போராட்டக் களத்தில் குதித்தனர். இந்நிலையில் தங்களையும் தேசிய குடிமக்கள் பதிவேடு பட்டியலில் இணைக்க அவர்கள் கோரிக்கை வைத்து மனு அளித்திருந்தனர்.
இந்நிலையில் உச்ச நீதிமன்ற உத்தரவுபடி, தேசிய குடிமக்கள் பதிவேடு இறுதி பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பட்டியலில் அந்த நாற்பத்தி ஒரு லட்சம் பேரும் இடம் பெறுவார்களா? என்பது போன்ற விவரங்கள் தெரியாத நிலையில், பதற்றம் எதுவும் உண்டாகாத வண்ணம் மாநிலம் முழுவதும் அதிகபட்ச பாதுகாப்பு ஏற்பாடுகளை அரசு செய்து உள்ளது.
பட்டியலை வெளியிட்ட பின் தேசிய குடிமக்கள் பதிவேடு மாநில ஒருங்கிணைப்பாளர் ரடெக் ஹஜேலா கூறியதாவது, மொத்தம் 3,11,21,004 நபர்கள் இறுதி தேசிய குடிமக்கள் பதிவேட்டில் இடம்பெற்றுள்ளார்கள். கோரிக்கைகளை சமர்ப்பிக்காதவர்கள் உட்பட 19,06,657 நபர்கள் இந்த பட்டியலில் இடம்பெறவில்லை. அவர்கள் இந்த முடிவில் திருப்தி இல்லையென்றால் நாங்கள் இந்தியர் என்பதற்கான ஆதாரணங்களை வெளிநாட்டினர் தீர்ப்பாயங்களுக்கு முன் சமர்ப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
national register of citizens in assam final list