மிகுந்த வேதனையுடன் மு.க. ஸ்டாலின் வெளியிட்ட இரங்கல் செய்தி!! - Seithipunal
Seithipunal


முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் திரு.டி.என்.சேசன் ஐ.ஏ.எஸ். மறைவுக்கு மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்து, இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார்.

இந்தியாவின் முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் திரு.டி.என்.சேசன் ஐ.ஏ.எஸ். அவர்கள், திடீரென மறைவெய்தினார் என்ற செய்தி கேட்டுப் பெரிதும் வேதனையுற்றேன்.

அவரது மறைவிற்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தியத் தேர்தல் ஆணையம் - திரு. டி.என்.சேசன் அவர்கள் தலைமைத் தேர்தல் ஆணையராக இருந்த போது, முழுமையாகத் தன்னாட்சி அதிகாரம் பெற்ற அமைப்பாக கம்பீரமாகத் திகழ்ந்தது.

“சுதந்திரமான, நேர்மையான” தேர்தலை நடத்தி, ஜனநாயகத்தின் உறுதிமிக்க பாதுகாவலனாக சேசன் அவர்கள் திகழ்ந்தார்கள்.

பாரபட்சமற்ற முறையில் தன் அதிகாரத்தைப் பயன்படுத்தி, ஆளுங்கட்சியோ - எதிர்க்கட்சிகளோ, யாருடைய தலையீட்டையும் முற்றிலுமாகத் தவிர்த்து, அனைவருக்கும் தேர்தலில் சம களத்தை ஏற்படுத்திக் கொடுத்தார்.

அவர், வாக்காளர்களின் நினைவில் மட்டும் நிற்கவில்லை. இந்திய ஜனநாயகத்தின் இரு கண்களிலும் என்றைக்கும் ஒளி வீசிக் கொண்டிருப்பார் என்பது திண்ணம்.

திரு டி.என். சேசன் அவர்கள், நேர்மை, கண்டிப்பு, நடுநிலை ஆகியவற்றுக்கு இலக்கணமாகத் திகழ்ந்தவர் என்றால், அது மிகையல்ல.

இந்தியத் தேர்தல் வரலாற்றில், டி.என். சேசன் அவர்களால் தலைமைத் தேர்தல் ஆணையம், சிறப்பான நம்பகத் தன்மையினை வளர்த்துப் புகழ் பெற்றது. அனைத்துத் தரப்பு மக்களின் ஆதரவையும் பெற்றது.

“சுதந்திரமான, நேர்மையான” தேர்தலை நடத்துவதற்கு, தமது அதிகாரம் முழுவதையும் பயன்படுத்தி, "தேர்தல் ஜனநாயகம்" என்ற தீபத்தைப் பிரகாசிக்கச் செய்த டி.என்.சேசன் அவர்கள், இன்றைக்கு நம்மிடையே இல்லை.

இது நாட்டிற்கு மட்டுமல்ல, ஜனநாயகத்தை விரும்பும் அரசியல் கட்சிகள் அனைவருக்கும் பேரிழப்பாகும்.

திரு டி.என்.சேசன் அவர்கள் காட்டிய, “நேர்மையான தன்னாட்சிப் பாதை”; என்றைக்கும் இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையத்தின் நிலைத்த - நீடித்த பாதையாக அமைவது, அவருக்கு இந்த நாடு செலுத்தும் மரியாதை, உண்மையான அஞ்சலியாகும்.

நாட்டில் கண்ணியம் மிக்க தேர்தல் நடைபெற வேண்டும் என்று கடைசி மூச்சு வரை பாடுபட்ட சேசன் அவர்களின் மறைவால் வாடும் அவருடைய குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், சக ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கும், தேர்தல் ஆணையத்தில் அவரோடு பணியாற்றியவர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

mk stalin condolences for TN seshan


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->