கோயில்களில் காலாவதியான, தேதி குறிப்பிடப்படாத பிரசாதங்கள் விற்பனை செய்வது கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை; அமைச்சர் சீ.ரமேஷ் உத்தரவு..! - Seithipunal
Seithipunal


கோயில்களில் காலாவதியான, தேதி குறிப்பிடப்படாத பிரசாதங்கள் விற்பனை செய்வது கண்டறியப்பட்டால், பிரசாத கடை ஒப்பந்ததாரர்கள் மற்றும் கடை நடத்துபவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், பாதுகாக்கப்பட்ட குடிநீர் தொட்டியினை தொடர்ச்சியான கால இடைவெளியில் பராமரிப்பு மேற்கொள்ளவும், அதற்கென தனியாக பதிவேடுகளை பராமரிக்க வேண்டும் எனவும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சீ.ரமேஷ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது;

இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சீ.ரமேஷ், திருச்சி, மலைக்கோட்டை அருள்மிகு தாயுமானசுவாமி திருக்கோயில், திருவானைக்காவல் அருள்மிகு ஜம்புகேசுவரர் திருக்கோயில் மற்றும் திருவெள்ளறை அருள்மிகு புண்டரீகாட்ச பெருமாள் திருக்கோயில் ஆகிய திருக்கோயில்களுக்கு நேரில் சென்று அவற்றின் நிர்வாகம் மற்றும் பக்தர்களுக்கான வசதிகள், பிரசாத விற்பனை நிலையம் ஆகியற்றின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்தார்.

அருள்மிகு தாயுமானசுவாமி கோயிலுக்கு புதிய அம்பாள் மரத்தேர் உருவாக்கிடும் பணி உபயதாரர் நிதி ரூ. 57.80 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வருகிறது. அப்பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்த அமைச்சர் ரமேஷ், திருத்தேர் பணிகளை விரைந்து முடித்து, பயன்பாட்டிற்கு கொண்டு வர அலுவலர்களுக்கு அறிவுரைகளை வழங்கினார்.

தொடர்ந்து திருவானைக்காவல் அருள்மிகு அகிலாண்டேஸ்வரி உடனுறை அருள்மிகு ஜம்புகேசுவரர் திருக்கோயிலுக்கு சென்ற அமைச்சர் ரமேஷ், திருக்கோயில் நிர்வாகம், யானை பராமரிப்பு மற்றும் பக்தர்களுக்கான அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு செய்தார்.

திருக்கோயில் பிரசாத விற்பனை நிலையத்தில் விற்பனை செய்யப்படும் உணவு பொருட்கள் மற்றும் பிரசாதங்கள் இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) வகுத்துள்ள வழிகாட்டுதல்கள் மற்றும் உணவுப் பாதுகாப்பு விதிமுறைகள் முழுமையாக கடைபிடிக்கப்பட்டுள்ளதா எனவும், உணவு பொருட்களின் தயாரிப்பு தேதி, காலாவதி தேதி குறிப்பிடப்பட்டுள்ளதா எனவும் பரிசோதித்தார்.

அவ்வாறு குறிப்பிடப்படாததை கண்டறிந்த அமைச்சர், அந்த உணவுப் பொருட்களை விற்பனை செய்யக் கூடாது எனவும், இது தொடர்பாக சம்மந்தப்பட்ட பிரசாத கடை ஒப்பந்ததாரரிடமிருந்து உரிய விளக்கம் பெற வேண்டுமென அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

பின்னர் திருக்கோயில் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள பாதுகாக்கப்பட்ட குடிநீர் தொட்டியில் (RO Unit) குடிநீரின் TDS அளவை கணக்கீடு செய்து, அது குறைவாக இருந்ததை கண்டறிந்து, அதில் இயற்கை கனிமச் சத்துக்கள் மற்றும் ஊட்டச் சத்துக்கள் போதுமான அளவில் இல்லாமல் இருக்கக்கூடும் என்பதால் பாதுகாக்கப்பட்ட குடிநீர் தொட்டியினை தொடர்ச்சியான கால இடைவெளியில் பராமரிப்பு மேற்கொள்ளவும், அதற்கென தனியாக பதிவேடுகளை பராமரிக்கவும் அமைச்சர் உத்தரவிட்டார்.

கோயில் வளாகத்திலுள்ள கழிப்பறைகள் தினமும் குறைந்தபட்சம் ஐந்து முறை சுத்தம் செய்யப்பட வேண்டுமென்றும், ஒவ்வொரு முறை சுத்தம் செய்யும் போதும் சுத்தம் செய்த நேரம் மற்றும் பணியாளர் விவரங்களுடன் கூடிய தனிப் பதிவேடு பராமரிக்கப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டார். திருக்கோயில்களில் பக்தர்களின் காலணிகளை பாதுகாத்திட அமைக்கப்பட்டுள்ள இலவச காலணி பாதுகாப்பு மையங்களை சிறந்த முறையில் பராமரித்திடவும் அறிவுரைகளை வழங்கினார்.

இத்திருக்கோயில் சார்பில் ரூ. 5.26 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் அர்ச்சகர்கள் மற்றும் பணியாளர்கள் குடியிருப்பின் கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்த அமைச்சர் ரமேஷ், பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டுவர அலுவலர்கள் மற்றும் பொறியாளர்களுக்கு அறிவுறுத்தினார்.

யானை அகிலாவுக்கு பிறந்தநாள்:

திருவானைக்காவல் அருள்மிகு ஜம்புகேசுவரர் திருக்கோயில் யானை அகிலாவுக்கு இன்று 24-வது பிறந்தநாள். அதனை முன்னிட்டு, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சீ.ரமேஷ் முன்னிலையில் திருக்கோயில் யானை அகிலா தனது இருப்பிடத்திலிருந்து மேள, தாள முழக்கத்துடன் நந்தவனத்திற்கு அழைத்து வரப்பட்டு கஜ பூஜை நடத்தப்பட்டது. பின்னர் அமைச்சர், திருக்கோயில் யானைக்கு இனிப்புகள், பழங்கள், காய்கறிகளை வழங்கி ஆசி பெற்றார்.

செய்தியாளர் சந்திப்பு:

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ரமேஷ், “தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து திருக்கோயில் நிர்வாகங்களும் பிரசாதம் விற்பனை நிலையங்கள், அன்னதான சமையலறைகள், குடிநீர் வசதிகள், கழிப்பிட வசதிகள் மற்றும் பொதுப் பயன்பாட்டு வசதிகளை முறையாக ஆய்வு செய்ய வேண்டுமெனவும், பிரசாத விற்பனை நிலையங்களில் உணவுப் பாதுகாப்பு விதிமுறைகளை முறையாக கடைபிடிக்கப்படுகிறதா என்பதனை தொடர்ச்சியாக ஆய்வு செய்திடவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

உணவுப் பாதுகாப்பு விதிமுறைகளை மீறுவது அல்லது காலாவதி தேதி குறிப்பிடப்படாத பொருட்களை விற்பனை செய்வது போன்ற குற்றச்செயல்கள் ஏதேனும் கண்டறியப்பட்டால், பிரசாத கடை ஒப்பந்ததாரர்கள் மற்றும் கடை நடத்துபவர்களிடம் விளக்கம் கோரப்பட்டு, தேவையான நடவடிக்கைகள் உடனடியாக எடுக்கப்பட வேண்டுமென்றும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அவ்வாறு கண்டறியப்பட்ட பிரசாத கடையின் விற்பனை நடவடிக்கைகள் உடனடியாக நிறுத்தப்படுவதோடு, இது குறித்து அமைச்சர் அலுவலகத்திற்கு உடனடியாக தெரிவிக்கப்பட வேண்டுமென்றும், தகுதியான அலுவலரின் அனுமதி பெற்ற பின்னரே அந்தக் கடைகள் மீண்டும் செயல்பட அனுமதிக்கப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அனைத்து திருக்கோயில்களிலும் FSSAI வழிகாட்டுதல்கள், உணவுப் பாதுகாப்பு தரநிலைகள், சுகாதார நடைமுறைகள் மற்றும் குடிநீர் தரக் கட்டுப்பாடுகள் ஆகியவை கண்டிப்பாக அமல்படுத்தப்பட வேண்டும்.

இதனை சம்மந்தப்பட்ட இணை ஆணையாளர்கள், துணை ஆணையாளர்கள், உதவி ஆணையாளர்கள், செயல் அலுவலர்கள் மற்றும் செயல் அலுவலர்கள் தொடர்ந்து கண்காணித்திட வேண்டும். பக்தர்களின் நலனை கருத்தில் கொண்டு, தொடர்ந்து தூய்மை பராமரிப்பு பணிகள் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் உறுதி செய்யப்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து திருவெள்ளறை அருள்மிகு புண்டரீகாட்ச பெருமாள் திருக்கோயிலுக்கு சென்று அங்கு நடைபெற்று வரும் ராஜகோபுர கட்டுமானப் பணிகளை அமைச்சர் ஆய்வு செய்தார். இந்த ஆய்வுகளின் போது மண்டல இணை ஆணையர் சு. ஞானசேகரன், ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதர் சுவாமி திருக்கோயில் இணை ஆணையர் / செயல் அலுவலர் செ. சிவராம்குமார், மலைக்கோட்டை திருக்கோயில் உதவி ஆணையர் அருள்செல்வன், திருவானைக்காவல் திருக்கோயில் உதவி ஆணையர் கி. உமா, மண்டல செயற் பொறியாளர் முத்து ஜெயம் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Minister C Ramesh orders strict action if the sale of expired prasadam is detected in temples


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...


செய்திகள்



Seithipunal
--> -->