திமுக மீண்டும் தேர்தலை சந்திக்க தயாராக இருக்கிறார்களா?அமைச்சர் அருண்ராஜ் கேள்வி..!
Minister Arunraj asks if the DMK is ready to face elections again
''ஒருவேளை தமிழக வெற்றிக்கழக ஆட்சி கவிழ்ந்தால் நாங்கள் மறுமுறை தேர்தலை சந்திக்க தயாராக இருக்கிறோம். ஆனால் திமுக மீண்டும் தேர்தலை சந்திக்க தயாராக இருக்கிறார்களா?'' என சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ் கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் அமைச்சர் அருண்ராஜ், சுகாதாரத்துறை செயலாளர் தாரேஸ் அகமது உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது மருத்துவர்கள் மற்றும் பணியாளர்களின் வருகை பதிவேடு, கழிவறை, அவசர சிகிச்சை பிரிவு, மருத்துவமனையின் படிகள் உள்ளிட்ட மருத்துவமனையின் வார்டுகளை ஆய்வு செய்தனர்.

அதன் பின்னர், செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் அருண்ராஜ் பேசியதாவது;
தமிழகத்தில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரிகளின் மாணவர் சேர்க்கைக்கான அரசு மற்றும் தனியார் கோட்டாக்கள் தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தனியார் மருத்துவமனையிலிருந்தும் வருகை தந்திருந்தார்கள். இந்த வருடம் எந்த சிக்கலும் இல்லாமல் தனியார் மற்றும் அரசு மருத்துவ கல்லூரியில் யூஜி மற்றும் பிஜி சேர்க்கை நடக்கும் என்று தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து ஓமந்தூர் மருத்துவமனையில் அனைத்து மருத்துவ சிகிச்சைகளும் ஒரே இடத்தில் பெறும் வகையில் அமைந்துள்ளது. ஒப்பந்த விதிமுறைகளின் அடிப்படையில் அரசு மருத்துவமனையில் உள்ள கழிவறைகள் தினமும் எட்டு முறை சுத்தம் செய்ய வேண்டும், இதை தவறாமல் பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

ஓமந்தூரார் மருத்துவமனையில் 2500 முதல் 3000 நோயாளிகள் வருகின்றனர். ஆனால், இங்கு போதுமான இதய மருத்துவர்கள் இல்லை என்றும், அதனால் தான் பொதுமக்கள் சிகிச்சைக்காக நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
அத்துடன், ஒருவேளை தமிழக வெற்றிக்கழக ஆட்சி கவிழ்ந்தால் நாங்கள் மறுமுறை தேர்தலை சந்திக்க தயாராக இருக்கிறோம். ஆனால் திமுக மீண்டும் தேர்தலை சந்திக்க தயாராக இருக்கிறார்களா? என கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், அதிமுக 108 இடங்களில் டெபாசிட் இழந்திருந்தது என நான் பேசியது தவறான தகவல். நான் கூறியது தவறுதான் என்றும் தெரிவித்துள்ளார்.
English Summary
Minister Arunraj asks if the DMK is ready to face elections again