மயிலாடுதுறையில் பல வருட பிரச்சனைக்கு தீர்வு! களத்திற்கு வந்த மாவட்ட ஆட்சியர் உறுதி!
mayiladuthurai drainage issue
மயிலாடுதுறையில் பாதாள சாக்கடை திட்ட குளறுபடிக்கு காரணம் நகராட்சியின் பராமரிப்பு குறைபாடு எனவும் மேலும் சில இடங்களில் சாலைகளில் பள்ளங்கள் தோன்றும் அபாயம் உள்ளது என்றும் மாவட்ட ஆட்சியர் பேட்டியளித்துள்ளார்.
நாகை மாவட்டம் மயிலாடுதுறை நகராட்சியில பாதாள சாக்கடைத் திட்டம் ரூ.42 கோடி மதிப்பீட்டில் 2003-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு, 2008-ஆம் ஆண்டு முதல் செயல்பாட்டுக்கு வந்தது. இத்திட்டம் தொடங்கப்பட்டதில் இருந்தே பல்வேறு பிரச்னைகள் இருந்து வந்தாலும், கடந்த 2 ஆண்டுகளாக பாதாள சாக்கடை குழாய்களில் உடைப்பு ஏற்பட்டு, அதன்காரணமாக பிரதான சாலைகளில் இதுவரை 13 முறை பள்ளங்கள் ஏற்பட்டுள்ளது.
இதுதொடர்பாக சமூக ஆர்வலர்கள் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். இதன்காரணமாக, மாவட்ட ஆட்சியர் தலைமையில், குடிநீர் வடிகால் வாரியம், கோட்டாட்சியர், வட்டாட்சியர், நகராட்சி ஆணையர், நகராட்சி பொறியாளர் அடங்கிய கூட்டுக்குழு அமைக்கப்பட்டு, அக்குழு இன்று மயிலாடுதுறையில் அனைத்துப்பகுதிகளிலும் பாதாள சாக்கடைத் திட்டத்தை ஆய்வு செய்தது.
இந்த ஆய்வுக்குப்பின் செய்தியாளர்களைச் சந்தித்த மாவட்ட ஆட்சியர் பிரவீன் நாயர் கூறியதாவது: பாதாள சாக்கடைத் திட்டத்திற்கு சிமெண்ட் பைப்கள் போடப்பட்டதாலேயும், பராமரிப்பு செயல்பாடு குறைவு காரணமாகவும், இன்னும் சில காரணங்களாலும் குழாய்களில் உடைப்புகள் ஏற்பட்டு சாலையில் பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன.
இதுபோல இன்னும் ஒருசில இடங்களில் பள்ளங்கள் தோன்ற வாய்ப்புகள் உள்ளது. மெயின் பைப் லைனை மாற்றுவதே இதற்கு நிரந்தர தீர்வு என பொறியாளர் வல்லுநர் குழுவினர் கண்டறிந்துள்ளனர். இந்த நீண்டகால தீர்வுக்கான செலவுக்கு நகராட்சியில் நிதி போதுமானதாக இல்லை. எனவே, இதனை கூட்டு ஆய்வுக்குழு மூலம் அரசின் கவனத்துக்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
செய்தியாளர் : மணி
English Summary
mayiladuthurai drainage issue