#சிதம்பரம் | அண்மையில் பாஜகவில் இணைந்த திமுக பிரமுகர் மாமல்லன் மயங்கிவிழுந்து மரணம்!
mamallan pass awy
கடலூர் மாவட்டம், சிதம்பரம் அடுத்த கடவச்சேரி கிராமத்தை சேர்ந்தவர் மாமல்லன். இவர் தனது மாணவர் பருவம் முதலே திமுகவில் இணைந்து, பல்வேறு பதவிகளை வகித்து வந்துள்ளார்.
குறிப்பாக குமராட்சி ஒன்றிய செயலாளராகவும், குமராட்சி ஒன்றிய பெருந்தலைவராகவும் பதவி வகித்துள்ளார். மேலும், சிதம்பரம், காட்டுமன்னார்கோவில், சீர்காழி, குமராட்சி ஆகிய பகுதிகளில் வாழும் மக்களிடையே பிரபலமான ஒரு அரசியல் பிரமுகராக வலம் வந்தார்.
கடந்த வருடம் திமுகவிலிருந்து விலகிய மாமல்லன், பாஜகவில் இணைந்தார். அவருக்கு பாஜகவின் மேற்கு மாவட்ட தலைவர் பதவியை பாஜகவின் தலைமை வழங்கியது.
இந்த நிலையில், இன்று மதியம் (வியாழக்கிழமை) சிதம்பரம் பாஜக கட்சி அலுவலகத்தில் அமர்ந்து நிர்வாகிகளுடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென மாமல்லன் நாற்காலியில் இருந்து மயங்கி கீழே விழுந்தார்.
உடனடியாக கட்சி நிர்வாகிகள் அவரை மீட்டு சிதம்பரம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். வெளியான தகவலின்படி அவர் மாரடைப்பால் இறந்ததாக தெரிகிறது.
மாமல்லன் மறைவுக்கு பாஜக மட்டுமல்லாமல் திமுக, அதிமுக, பாமகவை சேர்ந்த உள்ளூர் அரசியல் கட்சி பிரமுகர்களும், பொதுமக்களும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக குமராட்சி ஒன்றிய பகுதியில் மாமல்லன் இறப்பு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.