BigBreaking : கே சி வீரமணி வீட்டில் 5 கிலோ தங்கம், 9 சொகுசு கார்கள் பறிமுதல்.!
KC VEERAMANI IT RAID
கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் 2021 வரை வணிகவரி பத்திரப்பதிவு அமைச்சராக இருந்தபோது கே சி வீரமணி தனது பெயரிலும் அவருடைய தாயாரின் பெயரிலும் வருமானத்திற்கு அதிகமாக சொத்துகளை வாங்கியதாக புகார் எழுந்தது.
இந்நிலையில், இன்று காலை முதல் கே சி வீரமணிக்கு சொந்தமான 35 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, சென்னை, பெங்களூர் ஆகிய இடங்களில் சொத்துகளை வாங்கியதாக முன்னாள் அமைச்சர் கே சி வீரமணி மீது குற்றச்சாட்டு எழுந்தத நிலையில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது.
குறிப்பாக சென்னையில் 6 இடங்களில் இந்த சோதனை நடைபெற்றது. இந்நிலையில், சற்று முன் வெளியான தகவலின் படி, முன்னாள் அமைச்சர் கே சி வீரமணி வீட்டில் பணம், நகைகள், சொகுசு கார்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக லஞ்ச ஒழிப்பு துறை தெரிவித்துள்ளது.
34 லட்சம் ரூபாய் ரொக்கப் பணம், ஒரு லட்சத்து 80 ஆயிரம் மதிப்பிலான அந்நிய செலாவணி டாலர்கள், 9 சொகுசு கார்கள் பறிமுதல் செய்யப்பட்டு இருப்பதாக லஞ்ச ஒழிப்பு துறை தெரிவித்துள்ளது.
கணினிகளின் ஹார்ட் டிஸ்க்குகள், சொத்துக்கள் சம்பந்தப்பட்ட முக்கிய ஆவணங்கள், 623 சவரன் தங்க நகைகள் (5 கிலோ மதிப்புள்ள தங்க நகைகள்), நாற்பத்தி ஏழு கிராம் வைர நகைகள், ஏழு கிலோ வெள்ளி பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்புத் துறை தெரிவித்துள்ளது.
வங்கி கணக்குகள் தொடர்பான ஆவணங்கள் பறிமுதல் லஞ்ச ஒழிப்புத் துறை தெரிவித்துள்ளது. அதுமட்டுமில்லாமல், 30 லட்சம் ரூபாய் மதிப்பிலான மணல் அவரின் வீட்டு வளாகத்தில் குவிக்கப்பட்டு இருப்பதாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.