ஆட்சியை காப்பற்ற இறுதி நேர பரபரப்பு! அடுத்தடுத்து நடைபெற்று வரும் அதிரடி திருப்பங்கள்! துணை முதலமைச்சர், அமைச்சர் தீவிர முயற்சி!
Karnataka political problems and horse bargain with MLAs
கர்நாடகாவில் ஏற்கனவே இப்போவோ, அப்போவோ என்று ஒரு நெருக்கடியான சூழலில் தான் ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. 224 உறுப்பினர்களைக் கொண்ட கர்நாடக சட்டசபையில் கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பாஜக 105 இடங்களையும், காங்கிரஸ் 79 இடங்களையும் மதச்சார்பற்ற ஜனதா தளம் 37 இடங்களையும் கைப்பற்றி இருந்தது. ஒரு இடத்தில் சுயேட்சையும், ஒரு இடங்களில் பகுஜன் சமாஜ்வாதி, KPJP கட்சியும் வெற்றி பெற்றிருந்தது.
இந்த நிலையில் தேர்தலுக்கு பிந்தைய கூட்டணியில் மதச்சார்பற்ற ஜனதா தளம் காங்கிரஸ் இணைந்து ஆட்சி அமைத்தனர். மதச்சார்பற்ற ஜனதா தள தலைவர் குமாரசாமி முதலமைச்சராக பதவியேற்ற பிறகு தற்போது ஆட்சி நடைபெற்று வருகின்றது. கர்நாடகாவில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் எனில் 113 எம்எல்ஏக்கள் இருக்க வேண்டும். பகுஜன் சமாஜ்வாதி கட்சியின் எம்எல்ஏ, சுயேச்சை, KPJP மற்றும் காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் ஆதரவுடன் 119 இடங்களை காங்கிரஸ் மதச்சார்பற்ற ஜனதா தளம் வைத்திருந்தது.
இந்நிலையில் அவ்வப்போது அமைச்சர் பதவி கேட்டு போர்க்கொடி தூக்கும் எம்எல்ஏக்கள், தொடர்ச்சியாக சமாதானம் செய்யப்பட்டு வந்த நிலையில், ஏற்கனவே காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மூவர் ராஜினாமா செய்துவிட்ட நிலையில், தற்போது காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 5 எம்எல்ஏக்களும், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியை சேர்ந்த மூன்று எம்எல்ஏக்களும் சேர்ந்து சபாநாயகரை சந்தித்து உள்ளார்கள். அவர்கள் ராஜினாமா செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இந்நிலையில் கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவரும், துணை முதலமைச்சருமான பரமேஸ்வரா, அமைச்சர் சிவகுமார் காங்கிரஸ் உறுப்பினர்களை அவசர கூட்டத்திற்கு அழைத்துள்ளார்கள். என்ன முடிவு எடுப்பார்கள் என்பதனை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
ராஜினாமா குறித்து பேசிய எம்எல்ஏ இராமலிங்க ரெட்டி, நான் மேலிடத்தில் இருக்கும் யாரையும் குற்றம் சொல்ல விரும்பவில்லை. என்னை புறக்கணிப்பதாக உணர்கிறேன் அதனால் இந்த முடிவை எடுத்தேன் என கூறியுள்ளார். மேலும் அதே காங்கிரஸ் கட்சியில் எம்எல்ஏவாக இருக்கும் இராமலிங்க ரெட்டியின் மகள் சௌம்யா ரெட்டி என்ன முடிவு எடுப்பார் என தெரியாது என கூறியுள்ளார்.
இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் சிவகுமார், யாரும் ராஜினாமா செய்யவில்லை என்றும், அவர்கள் சபாநாயகரை சந்திக்கும் போது அவர்களை சந்தித்துவிட்டேன் எனவும் தெரிவித்துள்ளார். இன்னும் முழுமையான விவரங்கள் இல்லமமையால் கர்நாடக அரசியல் சூழல் பரபரப்பாக காணப்படுகிறது.
English Summary
Karnataka political problems and horse bargain with MLAs