காஞ்சிபுரம் கோயில் தங்கப் பல்லி சிலை திருட்டு முயற்சி - உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!
kanjipuram temple gold palli case chennai hc order
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் கருவறைக்குப் பின்புறம் உள்ள பிரகாரத்தில் அமைந்திருக்கும் தங்கப் பல்லி உள்ளிட்ட சிலைகளைத் திருட முயற்சி நடந்ததாகக் கூறித் தொடரப்பட்ட பொதுநல வழக்கு ஒன்றிற்குப் பதிலளிக்கும்படி, சென்னை உயர் நீதிமன்றம் தமிழக காவல் துறைக்கு உத்தரவிட்டுள்ளது.
வழக்கு விவரம்
இக்கோயிலின் உத்தரத்தில் தங்கப் பல்லி, தங்க சந்திரன், தங்க சூரியன் மற்றும் வெள்ளிப் பல்லி ஆகிய சிற்பங்கள் அமைந்துள்ளன.
இந்தச் சிலைகளைத் திருட முயற்சி நடந்துள்ளதாகவும், இதுகுறித்துச் சிறப்புப் புலனாய்வுக் குழு (எஸ்.ஐ.டி.) அமைத்து விசாரிக்க உத்தரவிட வேண்டும் என்றும் ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மன் என்பவர் பொதுநல வழக்குத் தாக்கல் செய்தார்.
அறநிலையத் துறை அதிகாரிகள் மற்றும் கோயில் அர்ச்சகர்கள் இணைந்து திருட்டுத்தனமாகச் சிலைகளை மாற்ற முயற்சித்ததாகவும், இது ஆகம விதிகளுக்கு முரணானது என்றும் மனுதாரர் குற்றம் சாட்டியுள்ளார். நேரில் சென்று பார்த்தபோது தங்கப் பல்லி சிலைகள் மாயமாகியிருந்ததாக மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நீதிமன்றத்தின் உத்தரவு
தலைமை நீதிபதி எம்.எம். ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி ஜி. அருள்முருகன் அமர்வில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.
காவல் துறை பதில்: காவல் துறை தரப்பில் ஆஜரான கூடுதல் அரசு வழக்கறிஞர், புகாரில் ஆரம்ப கட்ட விசாரணை நடத்தப்பட்டதாகவும், அதில் சிலை திருட்டு ஏதும் நடைபெறவில்லை எனத் தெரியவந்ததால், புகாரை முடித்து வைத்துவிட்டதாகவும் தெரிவித்தார்.
உத்தரவு: இதையடுத்து, இந்த மனுவுக்கு மூன்று வாரங்களில் விரிவான பதில் மனுவைத் தாக்கல் செய்யும்படி காவல் துறைக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
English Summary
kanjipuram temple gold palli case chennai hc order