காங்கிரஸ் முன்னாள் முதல்வரை விரட்டும் 'ஐட்டம்' விவகாரம்! அடுத்த சிக்கல்!
kamal nath item issue
மத்தியப் பிரேதச முன்னாள் அமைச்சர் இமார்த்தி தேவியை 'ஐ**ம்' என்று மரியாதை குறைவாக, காங்கிரஸ் மாநிலத் தலைவரும், முன்னாள் முதல்வருமான கமல்நாத், பேசியது துரதிருஷ்டவசமானது என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்து உள்ளார்.
நவம்பர் 3-ம் தேதி மத்திய பிரதேசத்தில் இடைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதில், மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரிலுள்ள தாப்ரா நகரில், பாஜக வேட்பாளராக இமார்த்தி தேவி அறிவிக்கப்பட்டு உள்ளார். இவர் முன்னாள் காங்கிரஸ் அமைச்சர் ஆவார்.
இந்த நிலையில், இந்த தொகுதி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் மாநிலத் தலைவர் கமல்நாத், இமார்த்தி தேவி குறித்து தரக்குறைவாக பேசியது பெரும் சர்ச்சையை கிளப்பியது. கமல்நாத்தின் இந்தக் பேச்சுக்கு பாஜக தரப்பு கடுமையான கண்டனங்கள் எழுந்தன.
கமல்நாத்தின் பேச்சு குறித்து விளக்கம் கேட்டு தேசிய மகளிர் ஆணையம் அவருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதேபோல் கமல்நாத்தின் கருத்துக்குக் கண்டனம் தெரிவித்து, அவரைக் கட்சியின் அனைத்துப் பதிவியிலிருந்தும் நீக்குமாறு, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு, மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சௌஹான் கடிதம் எழுதி உள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக கமல்நாத்துக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது. அதில், "தேர்தல் பிரசாரத்தில் தேர்தல் நடத்தை விதிமுறையை நீங்கள் மீறியிருப்பது தெரிகிறது. 48 மணி நேரத்தில் இது தொடர்பாக நீங்கள் விளக்கம் அளிக்க வேண்டும். தவறினால், தேர்தல் ஆணையம் தானாக நடவடிக்கை எடுக்கும்," என்று தெரிவித்து இருந்தது.
இந்நிலையில், கமல் நாத் நட்சத்திர பிரசார நபர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டார். அவர் பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டால் அந்த கூட்டத்திற்கான செலவு அப்பகுதி சட்டமன்ற வேட்பாளர் கணக்கில் சேர்க்கப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது.