கோஷ்டி மோதலை கைவிடச் சொல்லும் அமித்ஷா! கண்டுகொள்ளாமல் மௌனம் காக்கும் அண்ணாமலை!
internal party problem BJP District President Annamalai keeps silent
மாவட்டத் தலைவருக்கும் முன்னாள் மாவட்ட ஊடகப் பேரவை தலைவருக்கும் இடையே உள்ள உட்கட்சி பிரச்சனை பற்றி புகார் அளித்தும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கண்டு கொள்ளாமல் மௌனம் காக்கிறாரா?
தமிழக பாஜக தலைவர்களிடையே நிலவி வரும் உட்கட்சி பூசலை நிறுத்தி மேற்கு வங்கம் போன்ற திமுகவின் ஊழல்களை அம்பலப்படுத்தி அதற்கு எதிராக தொடர் போராட்டம் நடத்துமாறு பாஜக தலைவர் நட்டாவும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் உத்தரவிட்டு உள்ளதாக செய்திகள் வந்தன.
இந்நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்டம் கட்சராபாளையம் அருகே ஏர்வாய்பட்டினம் பேருந்து நிறுத்தில் மோடி படத்துடன் கூடிய மிகப் பெரிய பேனரை வைத்து அனைவருக்கும் மரக்கன்றுகளை வழங்கி மோடியின் பிறந்த நாளை கொண்டாடியுள்ளனர். மோடிக்கு பேனர் வைத்ததை பொறுத்துக் கொள்ள முடியாத அதே பகுதியைச் சேர்ந்த திமுக பிரமுகர் அந்த பேனரை கிழித்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த பாஜகவினர் முன்னாள் மாவட்ட ஊரக பேரவை தலைவர் வெற்றிவேல் தலைமையில் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதனால் பேனர் கிழிப்பு பிரச்சினைக்கு அங்கேயே முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு விட்டது.
இந்நிலையில் நேற்று நள்ளிரவில் முன்னாள் மாவட்ட ஊரக பேரவை தலைவர் வெற்றிவேலை தொலைபேசியின் வாயிலாக தொடர்பு கொண்ட மாவட்ட ஊடகப் பேரவை தலைவர் மகேந்திரன் "அது எப்படி என்னுடைய அனுமதி இல்லாமல் கட்சி லெட்டர் பேடை பயன்படுத்துவாய் , இதெல்லாம் நல்லா இல்ல இனிமேதான் எல்லாம் ஆரம்பம்" என கொலை மிரட்டல் விடுக்கும் விதமாக பேசியுள்ளார்.
இதற்கு பதில் அளித்த வெற்றிவேல் "அதை கேட்க உனக்கு உரிமை இல்லை" என கூறியுள்ளார். இது சம்பந்தமான ஆடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. மேலும் அந்த ஆடியோவில் " ஊரில் கட்டப்பஞ்சாயத்து செய்து கொண்டு கட்சிக்கு கெட்ட பேர் சேர்த்துள்ளாய் என்னைக் கேள்வி கேட்கும் அதிகாரம் உனக்கு இல்லை" என வெற்றிவேல் சொல்லுவதும் பதிவாகியுள்ளது.
இது தொடர்பாக வெற்றிவேல் மாநில தலைமைக்கு புகார் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில் "மாவட்ட தலைவர் பாலசுந்தரம் வீட்டின் முன் ஒட்டப்பட்ட போஸ்டர் கிழிக்கப்பட்ட தகராறு தொடர்பாக பாலசுந்தரத்தின் தவறான வழிகாட்டுதலால் கட்சிக்கு அவப்பெயர் ஏற்பட்டுள்ளது என கட்சி தலைமைக்கு புகார் அளித்தேன். அதனை மனதில் வைத்துக் கொண்டு மகேந்திரனை வைத்து கொலை மிரட்டல் விடுத்துள்ளதாகவும் கட்சியின் நிர்வாகிகள் இடையே குழப்பத்தை ஏற்படுத்தி மாவட்ட அளவில் கட்சி வளர்ச்சியை தடுப்பதாகவும் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.
மேலும் கட்சியில் துடிப்பாக செயல்படும் இளைஞர்கள் மீது ரவுடிகளை வைத்து கொலை வெறி தாக்குதல் நடத்தி செயல்படாமல் தடுக்கும் பாலசுந்தரம் மீது பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார். இச்சம்பவம் கள்ளக்குறிச்சி மாவட்ட பாஜக நிர்வாகிகளுக்கு இடையே பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது என்பது தெரிய வருகிறது.
நாளுக்கு நாள் அதிகரித்து வரும் தமிழக பாஜகவின் உட்கட்சி பூசலால் பாஜக தொண்டர்கள் அதிருப்தி ஏற்பட்டுள்ளது. கட்சி நிர்வாகிகளை கூட கட்டுப்படுத்த முடியாத அண்ணாமலையை வைத்து எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலை பாஜக எவ்வாறு வெற்றி பெறப் போகிறது என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
English Summary
internal party problem BJP District President Annamalai keeps silent