நாளை மாலை 5 மணி : நேரம் குறித்து கொடுத்த உச்சநீதிமன்றம்! உற்சாகத்தில் பாஜக!
Floor test in madhya pradesh
மத்திய பிரதேசத்தில் கமல்நாத் தலைமையில் நடைபெற்று வரும் காங்கிரஸ் ஆட்சியானது, நாளை மாலை 5 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தி பெரும்பான்மையை நிரூபிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2018ல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெற்ற காங்கிரஸ் கட்சியானது ஆட்சி அமைத்து வருகிறது. காங்கிரஸ் கட்சியில் முதலமைச்சர் பதவியை எதிர்பார்த்த ஜோதிராதித்யா சிந்தியாவிற்கு முதலமைச்சர் பதவி வழங்கப் படாமல் மூத்த தலைவர் கமல்நாத்திடம் வழங்கப்பட்டதால் விரக்தியில் இருந்தார் சிந்தியா. இரண்டு வருடம் பொறுத்து பார்த்த ஜோதிராதித்யா சிந்தியா இறுதியில் பாஜகவில் இணைந்தார். அவருடன் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 22 எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்தனர்.
இதனால் 114 காங்கிரஸ் உறுப்பினர்களுடன் சுயேட்சைகள், பகுஜன் சமாஜ் கட்சி எம்எல்ஏக்களுடன் ஆட்சி செய்து கொண்டிருந்த காங்கிரஸ் கட்சியானது தற்போது 92 உறுப்பினர்களை மட்டுமே வைத்துள்ளது. ஆட்சி செய்வதற்கு 115 உறுப்பினர்களின் ஆதரவு தேவை எனும் பட்சத்தில் தற்போது போதிய ஆதரவு இல்லாத நிலையில் காங்கிரஸ் ஆட்சி கவிழும் நிலையில் இருக்கிறது. இதனிடையே கடந்த 16ம் தேதி சட்டசபை கூட இருந்த நிலையில், கொரோனா வைரஸின் அச்சுறுத்தலை காரணம் காட்டி மார்ச் 26-ம் தேதிவரை சபையை ஒத்திவைத்தார் சபாநாயகர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அம்மாநில பாஜக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான சிவராஜ் சிங் சவுகான் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் இரு தரப்பிற்கும் விளக்கம் கேட்டு நேரம் ஒதுக்கிய நிலையில், நாளை மாலை 5 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என கமல் நாத் அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தற்போது 22 உறுப்பினர்கள் ராஜினாமா செய்துள்ள நிலையில் அவர்கள் அனைவரும் கர்நாடகாவில் ஒரு சொகுசு விடுதியில் தங்கி இருப்பதால் அவர்கள் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக வாக்களிப்பார்கள் என உறுதியாகக் கூற முடியாது. அதனால் காங்கிரஸ் ஆட்சி கவிழும் அபாயத்தில் உள்ளது. அதே சமயத்தில் பாஜக ஆட்சி அமையும் சூழல் தற்போது நிலவுகிறது.
கமல்நாத் அரசு மீது அதிருப்தியில் இருக்கும் எம்எல்ஏக்கள் நம்பிக்கை வாக்கெடுப்பில் கலந்து கொள்ள வருகை தந்தால் அவர்களுக்கு கர்நாடக டிஜிபி மற்றும் மத்திய பிரதேசம் டிஜிபி பாதுகாப்பு அளிக்க வேண்டும் எனவும் நம்பிக்கை வாக்கெடுப்பு முழுவதும் வீடியோவில் பதிவு செய்யப்பட வேண்டுமெனவும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
English Summary
Floor test in madhya pradesh