இது பற்றி பேச திமுகவுக்கு தகுதியே இல்லை.! முன்னாள் அமைச்சர் கேபி அன்பழகன் கொந்தளிப்பு.!
ex minister k p anbazhagan press meet
மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய 3 வேளாண் சட்டங்களுக்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு இருந்து வருகிறது. அதே சமயத்தில் இந்த புதிய வேளாண் சட்டங்களுக்கு விவசாயிகள் மத்தியிலும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், தமிழக சட்டப்பேரவையில் இந்த புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அப்போது அதிமுக தரப்பில் இந்த புதிய வேளாண் சட்டத்தில் சில மாற்றங்களை கொண்டு வர சொல்லி, மத்திய அரசிடம் வலியுறுத்துவோம் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.
இதனை திமுக ஏற்க மறுக்கவே, அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். இதற்கிடையே திமுக அமைச்சர் தங்கம் தென்னரசு, 'விவசாயிகளுக்கு துரோகம் விளைவித்து விட்டதாக அதிமுக மீது குற்றம் சாட்டினார்.
இந்நிலையில், முன்னாள் அமைச்சரும், பாலக்கோடு சட்டமன்ற உறுப்பினருமான கேபி அன்பழகன் செய்தியாளர்களை சந்தித்து தெரிவிக்கையில், "வேளாண் சட்ட விவகாரத்தில் அதிமுகவை குறை கூறுவதற்கு திமுகவுக்கு எந்த தகுதியும் கிடையாது. தமிழக விவசாயிகளுக்கு திமுக வேண்டுமானால் துரோகம் விளைவிக்குமே தவிர., அதிமுக ஒருபோதும் துரோகம் இழைத்தது கிடையாது. விவசாயிகளை காக்கும் பணியில் தான் அதிமுக செயல்பட்டு வருகிறது. இதனை விவசாயிகள் நன்கு அறிவர்.
நாங்கள் வேளாண் சட்டத்தில் ஆய்வு செய்து தேவையான மாற்றம் செய்ய மத்திய அரசிடம் வலியுறுத்துவோம் என்று தான் கூறினோம். திமுக அந்த கருத்தை ஏற்றுக்கொள்ள மறுத்தது. இந்த புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றி விட்டதால், விவசாயிகளுக்கு ஆதரவாக திமுக நிற்பது போல் வேஷம் போட்டுக் கொண்டிருக்கிறது. மேலும் அதிமுக மீது காழ்ப்புணர்ச்சி காரணமாக தவறான கருத்துக்களைப் பரப்பி வருகிறது." என்று முன்னாள் அமைச்சர் கேபி அன்பழகன் அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
English Summary
ex minister k p anbazhagan press meet