பீதியில் கும்மிடிப்பூண்டி மக்கள்.! முதல்வர் ஸ்டாலினுக்கு ஓபிஎஸ் வைத்த கோரிக்கை.! - Seithipunal
Seithipunal


கும்மிடிப்பூண்டி சிப்காட் வளாகத்தில் மாசு அதிகரித்து வருவதால், அப்பகுதிவாழ் மக்கள் ஆரோக்கியமாக வாழ்வதை உறுதி செய்வதோடு, விதிமுறைகளை மீறும் தொழிற்சாலைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, தமிழக அரசுக்கு முன்னாள் முதல்வரும், அதிமுகவின் ஒருங்கிணைப்பறுமான ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை வைத்துள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் விடுத்துள்ள அறிக்கையில், "நாட்டின் பொருளாதாரம் மேம்பட ஏதுவாக, தொழில்கள் வளர் வேண்டும், தொழிலாளர்கள் வாழ வேண்டும், தொழில் அமைதி நிலவ வேண்டும் என்பதை குறிக்கோளாகக் கொண்டு செயல்படும் ஓர் அரசு, தொழிற்சாலைகளின் மூலம் ஏற்படும் மாசுகள் உயிர் வாழ் இன்றியமையாததாக விளங்குகின்ற காற்றிலும், நீரிலும் கலக்காதவாறு, சுற்றுச்சூழலைப் பேணுவதிலும், மாசுவைக் கட்டுப்படுத்துவதிலும் கவனம் செலுத்தினால்தான் அது நிலைத்த வளர்ச்சிக்கு உகந்ததாக அமையும். 

தொழிற்சாலைகளிலிருந்து வெளியேறும் புகை : மற்றும் கழிவுநீர் காற்றிலும் , நீரிலும் கலந்து மாசு ஏற்படுவதை தடுக்கும் வகையில், நீர் (மாசு தடுப்பு மற்றும் கட்டுப்பாடு) சட்டம் மற்றும் காற்று (மாசு தடுப்பு மற்றும் கட்டுப்பாடு) சட்டம் ஆகியவை இயற்றப்பட்டு, அவற்றின்கீழ் விதிகள் வகுக்கப்பட்டு, இவற்றை நடைமுறைப்படுத்தும் பணியினை தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் மேற்கொண்டு வருகிறது. இருப்பினும், மேற்படி சட்டங்களும், அதன்கீழ் வகுக்கப்பட்ட விதிகளும் தொடர்ந்து தொழிற்சாலைகளால் புறக்கணிக்கப்படுவது வாடிக்கையாக உள்ளது. 

அந்த வகையில், கும்மிடிப்பூண்டி சிப்காட் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் நூற்றுக்கணக்கான தொழிற்சாலைகள் இயங்கி வருவதாகவும், சுற்றுச்சூழல் விதிகளை மீறி பல் தொழிற்சாலைகள் செயல்படுவதன் காரணமாக அப்பகுதிகளிலுள்ள காற்று, நீர் மற்றும் நிலம் மாசுபடுவதாகவும், உற்பத்தியின் போது வெளியேறும் புகை பல் கட்ட செய்முறைகளுக்குப் பிறகு உயரமான புகைபோக்கி மூலம் வெளியேற்றப்பட வேண்டும் என்ற நிபந்தனை இருந்தாலும், இதனை எந்தத் தொழிற்சாலையும் கடைபிடிக்கவில்லை என்றும், மாறாக கூரை வழியாக கரும் புகை வெளியேற்றப்பட்டு நச்சுப் புகையால் காற்று அசுத்தமாகிறது என்றும், இதன் காரணமாக காற்றின் தரம் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளதாகவும் , இந்தக் காற்றை சுவாசிக்கும்போது உடல் ரீதியான பல பிரச்சனைகள் மக்களுக்கு ஏற்படுவதாகவும் செய்திகள் வருகின்றன. 

'சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும்' என்னும் பழமொழிக்கேற்ப, மக்கள் ஆரோக்கியத்துடன் வாழ்ந்தால்தான் தொழில்கள் வளர்ந்து பொருளாதாரம் மேம்படும். எனவே, தொழில்கள் வளர வேண்டுமானால், பொருளாதாரம் மேம்பட வேண்டுமானால், தொழிற்சாலைகளில் பணிபுரிவோர் மற்றும் அந்தப் பகுதியைச் சுற்றியுள்ள மக்களின் ஆரோக்கியமும் மேம்பட வேண்டும். இதனை உறுதி செய்யும் பொருட்டு, கும்மிடிப்பூண்டி சிப்காட் வளாகத்திலேயே மாவட்டச் சுற்றுச்சூழல் அலுவலகம் இயங்கி வருகிறது என்றாலும், மாசின் தரம் குறைந்து கொண்டே வருவது அப்பகுதிமக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. 

பொதுமக்கள் சுவாசிக்கும் காற்றின் தரம் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்யும் வண்ணம், தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தொய்வின்றி தனது பணிகளை மேற்கொள்வது உறுதி செய்யப்பட வேண்டும் என்பதும், தொழிற்சாலைகளிலிருந்து வெளியேறும் புகை காற்று மண்டலத்தை தாக்காமலிருக்க விதிக்கப்பட்டுள்ள நிபந்தனைகளை தொழிற்சாலைகள் கண்டிப்பாக கடைபிடிக்கின்றனவா என்பது கண்காணிக்கப்பட வேண்டும் என்பதும் , விதியை மீறும் தொழிற்சாலைகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதும் அப்பகுதிமக்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. 

எனவே, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இதில் உடனடியாக தலையிட்டு, அப்பகுதியில் உள்ள தொழிற்சாலைகள் விதிகளை சரியாக பின்பற்றுகின்றனவா என்பதைக் கண்காணிக்கவும், அப்பகுதி மக்கள் ஆரோக்கியமாக வாழ்வதை உறுதி செய்யவும், விதிகளை மீறிச் செயல்படும் தொழிற்சாலைகள் மீது நடவடிக்கை எடுக்கவும் உரிய அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்." என்று அந்த அறிக்கையில் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ex cm ops say about kummudi poondi sipcot issue


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->