இன்னும் இரண்டு நாள்., அவசர ஆலோசனையில் எடப்பாடி பழனிச்சாமி.!
EX CM EPS meeting today in salem
திமுக அரசை கண்டித்து வரும் 28 ஆம் தேதி தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாக அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே பழனிச்சாமி அறிவித்து உள்ளனர்.
இதுகுறித்து அவர்கள் வெளியிட்டுள்ள அந்த அறிவிப்பில், "விடியல்” தரப்போவதாக தேர்தல் வாக்குறுதி அளித்த திமுக அரசே! வாக்களித்து வெற்றி பெறச் செய்த மக்களை வஞ்சிக்காதே. தேர்தல் வாக்குறுதிகளான "நீட்" தேர்வு ரத்து, 1000 ரூபாய் உரிமை தொகை, பெட்ரோல் ரூ.5 /-, டீசல் விலை ரூ.4 /-ம் குறைப்பு, சமையல் எரிவாயு சிலிண்டருக்கு ரூ.100 /- மானியம் ஆகியவற்றை உடனே நிறைவேற்ற வேண்டும்.
அதிமுகவினர் மீது திமுக அரசு பொய் வழக்கு போடும் மலிவான அரசியல் ஆயுதத்தைக் கையில் எடுத்து, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை அழித்துவிடலாம், ஒழித்துவிடலாம் என்று கனவு கண்டால் அது பகல் கனவாகவே முடியும். இந்த பிற்போக்குத் தனத்தைக் கைவிட்டு நேர்மையாகவும், திறமையாகவும் ஆட்சி செய்ய தி.மு.க. முன் வரட்டும்,
தமிழ் நாட்டு மக்களின் நலனுக்காகவும், தமிழ் நாட்டின் பொருளாதார வளர்ச்சி மேம்படவும் மேற்சொன்ன கோரிக்கைகளை தி.மு.க. அரசின் கவனத்திற்குக் கொண்டுவர அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் விழைகிறது.
திமுக அரசின் மெத்தனப்போக்கை களையவும், அக்கறையுடன் மக்கள் குரலுக்கு செவி சாய்க்கச் செய்யவும் வருகின்ற 28.7.2021 - புதன் கிழமை அன்று காலை 10 மணி அளவில் கழக உடன்பிறப்புகள் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஒன்றியம், ஊராட்சி ஆகிய பகுதிகளில் தங்கள் வீடுகளின் முன்னே பதாகைகளை ஏந்தி கவன ஈர்ப்பு முழக்கங்களை எழுப்பி தமிழ் நாட்டு மக்களின் உரிமைக் குரல்களாய் ஒலிக்க வேண்டும்" என்று அதிமுக தலைமை வெளியிட்டுள்ள அந்த போராட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில், தமிழக முன்னாள் முதல்வரும், அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி கே பழனிச்சாமி இன்று சேலத்தில் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு உள்ளார்.
சேலம் புறநகர் மாவட்ட அதிமுக தலைமை அலுவலகத்தில், எடப்பாடி கே பழனிச்சாமி தலைமயில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர். இந்த ஆலோசனை கூட்டத்தில், வரும் 28 ஆம் தேதி தமிழக அரசை கண்டித்து நடைபெற உள்ள போராட்டத்தின் ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை நடந்ததாக தெரிகிறது.
English Summary
EX CM EPS meeting today in salem