அதிமுகவில் மீண்டும் பொதுச்செயலாளர் பதவி.. ஈ.பி.எஸ்.சின் மாஸ்டர் பிளான்.?
eps new plan in admk
தமிழ்நாட்டுக்கு வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பது தொடர்பாக கடந்த ஆகஸ்ட் 28ம் தேதி முதல் 13 நாட்கள் அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளுக்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தனது சுற்று பயணத்தை முடித்துக்கொண்டு நேற்று முன் தினம் சென்னை திரும்பினார். அவருக்கு அதிமுகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதைத்தொடர்ந்து கட்சியின் பொதுக்குழுவை கூட்ட முதலமைச்சர் பழனிசாமி முடிவு செய்துள்ளதாக அதிமுக வட்டாரங்கள் கூறுகின்றனர்.
ஒவ்வொரு அரசியல் கட்சியும் ஆண்டுக்கு ஒரு முறை பொதுக்குழுவை கூட்ட வேண்டும் என்பது தேர்தல் ஆணையத்தன் விதிமுறை ஆகும். வழக்கமாக டிசம்பரில் பொதுக்குழுவை கூட்டுவார்கள். ஆனால், அதிமுக தலைமை மார்ச்சுக்குள் பொதுக்குழுவை கூட்டுவதாக தேர்தல் ஆணையத்திடம் தெரிவித்திருந்தது. மார்ச் மாதம் நாடாளுமன்றத் தேர்தல் அறிவிப்பு வெளியானதால், பொதுக்குழு கூட்டவில்லை.
தற்போது பொதுக்குழுவை கூட்டவேண்டும் என்று தேர்தல் ஆணையத்திடம் இருந்து அறிவுறுத்தல் வந்திருப்பதால் அதிமுக அமைச்சர்களுடன் கலந்து ஆலோசித்து, விரைவில் பொதுக்குழுவை கூட்டுவதற்கான தேதியை முடிவு செய்ய எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டுள்ளாராம். கட்சிக்குள் ஒன்றை தலைமை வேண்டும் என்ற கோரிக்கை வலுபெற்றுவருவதால், மீண்டும் பொதுச்செயலாளர் பதவியை உருவாக்க வியூகம் தயாராகி வருகிறதாம்.