எட்டப்பன்களுக்கு ஈரோடு தேர்தல் ஒரு பாடமாக அமைய வேண்டும்... நிர்வாகிகள் மத்தியில் இபிஎஸ் சூளுரை..!!
EPS advisory for 2nd day on Erode East byelection
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் குறித்து அதிமுக தேர்தல் பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் இரண்டாவது நாளாக இன்றும் தொடங்கியது. இந்த ஆலோசனை கூட்டத்தில் அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமை தாங்கி பேசினார். அப்பொழுது பேசி அவர் "ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் மிகப்பெரிய வெற்றி சரித்திரம் படைக்க வேண்டும். மக்கள் பாராட்டுகிற அளவுக்கு தொகுதி பொறுப்பாளர்கள் பணி செய்ய வேண்டும். இரு பெரும் அரசியல் தலைவர்கள் கற்றுக் கொடுத்த அரசியலை இந்த தொகுதியில் பயன்படுத்தி மிகப்பெரிய சரித்திர வெற்றியை பெற வேண்டும்.
அதிமுக கட்சியினர் எங்கு இருந்தாலும் அவர்களது உணர்வுகள் ஈரோடு கிழக்கு தொகுதியை நோக்கி இருக்கும். திமுக ஆட்சி பொறுப்பு ஏற்ற பிறகு ஆட்சி எப்போது விலகும் என மக்கள் எதிர்பார்ப்பதாக திமுகவினரே புலம்புகின்றனர். திமுகவின் 2 ஆண்டுகள் ஆட்சியில் ஈரோடு கிழக்கு தொகுதிக்கு ஒரு துரும்பை கூட திமுக கிள்ளி போட்டதில்லை. திமுகவினர் கூனி குறுகித் தான் மக்களிடம் ஓட்டு சேகரிக்க முடியும். அதிமுகவினர் நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு வாக்கு சேகரிக்கலாம்.
அதிமுக செயல்படுத்திய தாலிக்கு தங்கம், திருமண உதவித் தொகை திட்டங்களை கூட இந்த திமுக அரசு நிறுத்திவிட்டது. ஈரோடு மாநகராட்சி மக்களுக்காக 485 கோடி ரூபாய் செலவில் செயல்படுத்தப்பட்ட ஊராட்சி கோட்டை குடிநீர் திட்டத்தை அதிமுக கொண்டு வந்தது என்ற ஒரே காரணத்துக்காக திமுக அரசு நிறுத்திவிட்டது. அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத மருத்துவ இட ஒதுக்கீட்டு அதிமுக அரசால் கொண்டுவரப்பட்டது. இதனால் ஆண்டுதோறும் 564 அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவம் படிக்கின்றனர். அவர்களின் மருத்துவப் படிப்பையும் அதிமுக அரசு ஏற்றது.
இன்னும் 3 நாட்களுக்குள் வாக்காளர் விவரங்களை தொகுதி பொறுப்பாளர்கள் சரி பார்க்க வேண்டும். நமக்கு சோதனை என்பது புதியதல்ல, பல சோதனைகளை வென்ற இயக்கம் தான் அதிமுக, சில எட்டப்பர்களாக மாறி எட்டப்பன் வேலை செய்து இந்த இயக்கத்தை முடக்க வேண்டும் என எதிரிகளோடு கைகோர்த்து பணி செய்து வருகின்றனர். எனவே இந்த இடைத்தேர்தல் அவர்களுக்கு ஒரு பாடமாக அமைய வேண்டும். சரியான முறையில் நாம் உழைத்தால் வெற்றி நிச்சயம்" என அதிமுக நிர்வாகிகள் மத்தியில் பேசியுள்ளார்.
English Summary
EPS advisory for 2nd day on Erode East byelection