தைலாபுரம் திரும்பிய சிறிது நேரத்தில் வந்த விபத்து செய்தி.! வேதனையின் மருத்துவர் இராமதாஸ்.!
Dr Ramadoss Say About PMK member car accident in vikkiravandi
விக்கிரவாண்டி விபத்தில் காயமடைந்த 11 பாட்டாளிகளுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் அவர்கள் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இன்று அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "விழுப்புரத்தில் இன்று காலை நடைபெற்ற பாட்டாளி மக்கள் கட்சி ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்ட பின்னர் சொந்த ஊர் திரும்பியபோது ஏற்பட்ட விபத்தில் பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்த 11 பேர் காயமடைந்தனர் என்ற செய்தியறிந்து நான் மிகுந்த அதிர்ச்சியும் கவலையும் அடைந்தேன்.
விழுப்புரம், திருக்கோவிலூர், விக்கிரவாண்டி ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான பாட்டாளி மக்கள் கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் விழுப்புரத்தில் இன்று காலை நடைபெற்றது. மிகவும் எழுச்சியுடன் நடைபெற்ற இக்கூட்டத்தில் கலந்து கொண்டு தைலாபுரம் தோட்டத்திற்கு திரும்பிய சிறிது நேரத்தில், எனக்குக் கிடைத்த இந்த விபத்து குறித்த தகவல் மிகவும் வேதனை அளிக்கிறது.
விழுப்புரம் கூட்டத்தில் கலந்து கொண்ட, விக்கிரவாண்டி சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட பொன்னாங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தசாமி, பழனி, சோபன்பாபு, கணேசன், வீரப்பன், சுப்பிரமணி, நாகராசு, பாலு, கோபாலகிருஷ்ணன், குணசேகர், நாவப்பன் ஆகிய 11 பேரும் தங்களின் சொந்த ஊருக்கு தானி மற்றும் இருசக்கர ஊர்திகளில் சென்றுள்ளனர். விக்கிரவாண்டியில் கும்பகோணம் சாலை பிரியும் இடத்தில் தேனீர் குடிப்பதற்காக இவர்கள் திரும்ப முயன்றபோது, பின்னால் வந்த மகிழுந்து மோதி தானி கவிழ்ந்தது. இந்த விபத்தில் 11 பேரும் பலத்த காயமடைந்தனர்.
உடனடியாக அவர்கள் அனைவரும் முண்டியம்பாக்கத்தில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். மயிலம் தொகுதி பா.ம.க. சட்டப்பேரவை உறுப்பினர் சிவக்குமார், மாவட்டத் தலைவர் தங்கஜோதி, வன்னியர் சங்க மாநில துணைத் தலைவர் அன்புமணி, மாவட்டச் செயலாளர் பாலசக்தி, முன்னாள் மாவட்டச் செயலாளர் புகழேந்தி ஆகியோர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குச் சென்று, காயமடைந்தவர்களிடம் நலம் விசாரித்தனர்.
மருத்துவர்களிடம் பேசி அவர்கள் அனைவருக்கும் சிறப்பான மருத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. அவர்களின் உடல்நிலை குறித்து மருத்துவர்களிடம் நான் தொடர்ந்து விசாரித்து வருகிறேன். அவர்கள் அனைவரும் விரைவில் முழுமையான உடல்நலம் பெறவேண்டும் என்ற எனது விருப்பத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்" என்று மருத்துவர் இராமதாஸ் தெரிவித்துள்ளார்.
English Summary
Dr Ramadoss Say About PMK member car accident in vikkiravandi