முதல் ஆளாக கலந்து கொள்பவர் அவர் - வெளியான செய்தியால் வேதனையில் டாக்டர் இராமதாஸ்.!
Dr Ramadoss Mourning to cuddalore sibakkiyam ammal death
பாமக தொடங்கப்பட்டது முதல் கட்சி பணியாற்றிய கடலூர் சிவபாக்கியம் அம்மாள் மறைவுக்கு, அக்கட்சியின் நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்த அவரின் இரங்கல் செய்தியில், "கடலூர் மஞ்சக்குப்பம் பகுதியைச் சேர்ந்த பாட்டாளி மக்கள் கட்சியின் ஒருங்கிணைந்த கடலூர் மாவட்ட மகளிர் அணி செயலாளரும், எம். முத்துசாமி சோழகனார் அவர்களின் மனைவியுமான சிவபாக்கியம் உடல்நலக் குறைவால் இன்று காலமானார் என்ற செய்தியறிந்து வேதனையடைந்தேன்.
வன்னியர் சங்கம் தொடங்கப்பட்ட நாளில் இருந்து அதில் தம்மை இணைத்துக் கொண்டவர் சிவபாக்கியம் அம்மாள். பாட்டாளி மக்கள் கட்சி தொடங்கப்பட்ட போதும் அதில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டு கட்சியின் வளர்ச்சிக்காகவும், சமூக முன்னேற்றத்திற்காகவும் கடுமையாக உழைத்தவர்.
கடலூர் மாவட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் எந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டாலும், எந்த போராட்டம் அறிவிக்கப்பட்டாலும் அதில் முதல் ஆளாக கலந்து கொள்பவர் சிவபாக்கியம் அம்மாள். என் மீது மிகுந்த பற்றும், மரியாதையும் கொண்டவர். கடலூர் மாவட்டத்திற்கு செல்லும் போதெல்லாம் என்னை சந்திப்பதை வழக்கமாகக் கொண்டவர். கடலூர் மாவட்டத்திலுள்ள பாட்டாளி மக்கள் கட்சியின் அனைத்து நிலை நிர்வாகிகளிடமும் மிகுந்த நன்மதிப்பை பெற்றவர் சிவபாக்கியம் அம்மாள்.
சிவபாக்கியம் அம்மாளை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், நண்பர்கள், பாட்டாளி சொந்தங்கள் உள்ளிட்ட அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்."
இவ்வாறு அந்த இரங்கல் செய்தியில் மருத்துவர் இராமதாஸ் தெரிவித்துள்ளார்.
English Summary
Dr Ramadoss Mourning to cuddalore sibakkiyam ammal death