மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் சேலம் 8 வழிச்சாலை வழக்கு : புதிய குண்டை தூக்கிப்போட்ட சுற்றுச்சூழல் துறை! டாக்டர் ராமதாஸ் கண்டனம்!  - Seithipunal
Seithipunal


சென்னை - சேலம் இடையிலான 8 வழிச்சாலைக்கு நிலம் கையகப்படுத்துவதற்கு முன்பாக, அந்தத்  திட்டத்திற்கு சுற்றுச்சூழல் தாக்க அனுமதி பெற வேண்டும் என்று எந்த கட்டாயமும் இல்லை என்று மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் உச்சநீதிமன்றத்தில் தெரிவித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் இந்த புதிய நிலைப்பாடு கடுமையாக கண்டிக்கத்தக்கது என பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு தெரிவித்துள்ளார். 

இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சென்னை- சேலம் இடையிலான 8 வழிச்சாலைத் திட்டத்திற்கு சுற்றுச்சூழல் தாக்க அனுமதி பெறாமல், பொதுமக்களிடம் கருத்துக் கேட்புக் கூட்டங்களை நடத்தாமல் நிலங்களை கையகப்படுத்தக் கூடாது என்று கடந்த ஆண்டு ஏப்ரல் 8-ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதுமட்டுமின்றி 8 வழிச்சாலை திட்டத்திற்கான திட்ட அறிக்கையையும் ரத்து செய்து உயர்நீதிமன்றம் ஆணையிட்டது.  அதை எதிர்த்து தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தது.

அந்த வழக்கில் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பதில் மனுவில், ‘‘2006-ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிவிக்கையின்படி  செயல்படுத்தப் படும் அனைத்துத் திட்டங்களுக்கும் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் தான் ஒப்புதல் வழங்க வேண்டும். அதேநேரத்தில் எந்த ஒரு திட்டத்திற்கும் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு அனுமதி பெற்ற பிறகு தான் நிலம் கையகப்படுத்தப்பட வேண்டும் என்று எந்த கட்டாயமும் இல்லை’’ என்று கூறப்பட்டிருக்கிறது. சென்னை - சேலம் 8 வழிச்சாலைத் திட்டத்தை செயல்படுத்த அப்பட்டமாக ஆதரவு அளிக்கும் நிலைப்பாடு இதுவாகும். இது சுற்றுச்சூழல் அமைச்சகம் உருவாக்கப்பட்டதன் அடிப்படை நோக்கத்திற்கே எதிரானது.

உச்சநீதிமன்றத்தில் இவ்வழக்கு நேற்று முன்நாள் விசாரணைக்கு வந்த போது, தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் சார்பில் வாதிட்ட மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, சென்னை - சேலம் இடையிலான 8 வழிச்சாலை தேசிய முக்கியத்துவம் வாய்ந்தது என்பதால், அதற்கு நிலங்களை கையகப்படுத்துவதற்கு தனி நடைமுறை இருப்பதாகவும், அதனால் நிலம் கையகப்படுத்த சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அனுமதி தேவையில்லை என்றும் வாதிட்டார். ஆனால், மத்திய சுற்றுச்சூழல் துறையோ அதையும் தாண்டி, 8 வழிச்சாலைக்கு மட்டுமல்ல... மற்ற திட்டங்களுக்கும் கூட நிலம் கையகப்படுத்த சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அனுமதி பெறத் தேவையில்லை என்று கூறியிருக்கிறது.

இந்தியாவின் சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டியது தான் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் பணி ஆகும். ஆனால், சுற்றுச்சூழல் அமைச்சகமோ அதற்கு மாறாக, சுற்றுச்சூழலுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய சென்னை - சேலம் 8 வழிச்சாலை திட்டத்தை செயல்படுத்துவதில் நெடுஞ்சாலைத்துறையை விட அதிக ஆர்வம் காட்டுகிறது. இது வேலியே பயிரை மேயும் செயலாகும். இதே வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற போதும் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகமும் ஒரு தரப்பாக சேர்க்கப் பட்டிருந்தது. ஆனால், அப்போது இது தொடர்பாக எந்த நிலைப்பாட்டையும் எடுக்காத மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம், இப்போது முற்றிலும் புதிய நிலைப்பாட்டை எடுத்திருப்பது இத்திட்டத்தால் பாதிக்கப்படக் கூடிய உழவர்களுக்கும், பொதுமக்களுக்கும் இழைக்கும் மிகப்பெரிய நம்பிக்கைத் துரோகம் ஆகும்.

8 வழிச்சாலை திட்டம் செயல்படுத்தப்பட்டால் பல்லாயிரக்கணக்கான உழவர்கள் வாழ்வாதாரங்களை இழப்பார்கள். அதுமட்டுமின்றி, சுற்றுச்சூழலுக்கு எல்லையில்லாத பாதிப்பு ஏற்படும். அதனால் தான் இந்த திட்டத்தை பாட்டாளி மக்கள் கட்சி கடுமையாக எதிர்த்து வருகிறது. இதை உணர்ந்து 8 வழிச்சாலை  தொடர்பாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள புதிய பதில் மனுவை சுற்றுச்சூழல் அமைச்சகம்  உடனடியாக திரும்பப்பெற வேண்டும். சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் சென்னை - சேலம் 8 வழிச்சாலைத் திட்டத்திற்கு சுற்றுச்சூழல் அமைச்சகம் தொடர்ந்து கடும் எதிர்ப்பை தெரிவிக்க வேண்டும்.

சென்னையிலிருந்து சேலம் இடையிலான 8 வழிச்சாலைத் திட்டம் உழவர்களின் வாழ்வாதாரத்தை கடுமையாக பாதிக்கும். அதனால் இந்தத் திட்டத்தை பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து கடுமையாக  எதிர்க்கும். உழவர்களின் நலன்களை பாதுகாப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும்" என டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

dr ramadoss condemns environmental ministry decision in eight lane road issue


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->