சமையல் எரிவாயு விலை உயர்வை திரும்பப்பெற வேண்டும் - டாக்டர் அன்புமணி இராமதாஸ்.!
Dr Anbumani Ramadoss say about lpg price hike
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால், பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயுவின் விலை அதிகரித்து வருகிறது.
அதன்படி, கடந்த பிப்ரவரி மாதத்திலிருந்து சமையல் எரிவாயு சிலிண்டர் உயர்த்தப்பட்டு வருகிறது. கடந்த பிப்ரவரி 4-ஆம் தேதி முதல் கடந்த மாதம் 1-ஆம் தேதி வரை பலமுறை 25, 50 ரூபாய் என்று உயர்த்தப்பட்டு 14 கிலோ வீட்டு உபயோக சிலிண்டருக்கு ரூ. 900.50 ஆக விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில், இன்று வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மீண்டும் உயர்த்தியுள்ளது. சென்னையில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ. 15 உயர்ந்து, ரூ.915.50 ஆக விற்பனை செய்யப்படுகிறது. இதனால், இல்லத்தரசிகள் அதிர்ச்சியில் உள்ளனர்.
இந்நிலையில், சமையல் எரிவாயு விலை உயர்வை திரும்பப்பெற வேண்டும் என்று முன்னாள் மத்திய அமைச்சரும், பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணி தலைவருமான மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "வீட்டுப்பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு உருளையின் விலை 900 ரூபாயிலிருந்து ரூ.915 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த 8 மாதங்களில் அறிவிக்கப்பட்டுள்ள எட்டாவது விலை உயர்வு இதுவாகும். சமையல் எரிவாயு விலையை தொடர்ந்து உயர்த்தி வருவது எந்த வகையிலும் நியாயமல்ல!
பிப்ரவரி மாதத் தொடக்கத்தில் ரூ.710 ஆக இருந்த எரிவாயு விலை இப்போது 205 ரூபாய் அதிகரித்துள்ளது. அத்தியவசியப் பொருளான எரிவாயு விலை 8 மாதங்களில் 29% உயர்த்தப்பட்டிருப்பது சரியல்ல. ஏழை - நடுத்தர மக்களை பாதிக்கும் இந்த விலை உயர்வை உடனடியாக திரும்பப்பெற வேண்டும்" என்று மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
English Summary
Dr Anbumani Ramadoss say about lpg price hike