மத்திய அரசு சொன்ன அருமையான ஆலோசனையை, தமிழக அரசு செயல்படுத்த வேண்டும் - டாக்டர் அன்புமணி இராமதாஸ்.!
Dr Anbumani Ramadoss say about Central Govt idea
சத்துணவுத் திட்டத்தின் சிறுதானியங்கள் வழங்கும்படி மாநில அரசுகளை மத்திய அரசு கேட்டுக் கொண்டிருக்கிறது. இந்த ஆரோக்கியமான யோசனையை மாநில அரசுகள் செயல்படுத்த வேண்டும், என்று முன்னாள் மத்திய அமைச்சரும், பாமகவின் இளைஞரணி தலைவருமான மருத்துவர் அன்புமணி இராமதாஸ் கோரிக்கை வைத்துள்ளார்.
இதுகுறித்து இன்று அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "மதிய உணவுத் திட்டத்தின்படி வாரத்திற்கு ஒரு நாளாவது பள்ளிக்குழந்தைகளுக்கு சிறு தானிய உணவுகளை வழங்கும்படி மாநில அரசுகளை மத்திய அரசு கேட்டுக் கொண்டிருக்கிறது. மாணவர்களின் உடல் நலன் சார்ந்த இந்த யோசனை மிகச்சரியானது; வரவேற்கத்தக்கது.
இந்தியாவில் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளில் 38 விழுக்காட்டினர் வளர்ச்சிக் குறைபாட்டினாலும், 59 விழுக்காட்டினர் இரத்த சோகையாலும் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கின்றனர். இத்தகைய குழந்தைகளின் உடல் நலனை மீட்டெடுக்க சிறுதானிய உணவுகளை வழங்குவது மிகவும் தேவையானது.
சிறுதானிய உணவு வகைகள் ஊக்குவிக்கப்பட வேண்டும் என்று பா.ம.க. தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. தமிழ்நாடு அரசும் சிறுதானிய இயக்கத்தை செயல்படுத்தப் போவதாக வேளாண் நிதிநிலை அறிக்கையில் அறிவித்திருக்கிறது.
சிறுதானிய உணவு வகைகளில் பயன்கள் குறித்து யாருக்கும் மாற்றுக் கருத்து இல்லாத நிலையில், தமிழ்நாட்டில் சத்துணவுத் திட்டத்தில் வாரத்திற்கு ஒரு நாள் அல்லது இரு நாட்கள் சிறுதானிய உணவு வகைகளை வழங்க தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும்." என்று மருத்துவர் அன்புமணி இராமதாஸ் தெரிவித்துள்ளார்.
English Summary
Dr Anbumani Ramadoss say about Central Govt idea