போலீசாரின் பாதுகாப்பை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் -மருத்துவர் அன்புமணி இராமதாஸ்.!
Dr Anbumani Ramadoss Mourning To karur police inspector murder
கரூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ஆய்வாளராக கனகராஜ் பணிபுரிந்து வருகிறார். அவர் இன்று காலை வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது, அந்த வழியாக வந்த வேன் ஒன்றை தடுத்து நிறுத்தி சோதனை செய்ய முயற்சித்துள்ளார்.
அப்போது அந்த வேன் நிற்காமல் அவர் மீது மோதி விட்டு வேகமாக சென்றுள்ளது. வேன் மோதியதில் பலத்த காயமடைந்த போக்குவரத்து காவல் ஆய்வாளர் கனகராஜ்-யை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் போக்குவரத்து ஆய்வாளர் கனகராஜ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்நிலையில், திருச்சி அருகே ஆடு திருடர்களைப் பிடிக்கச் சென்ற காவல் அதிகாரி பூமிநாதன் வெட்டிக் கொல்லப்பட்ட அதிர்ச்சி விலகும் முன்பே அடுத்த நிகழ்வு நடந்திருப்பது கவலை அளிப்பதாக, முன்னாள் மத்திய அமைச்சரும், பாமக இளைஞரணி தலைவருமான அன்புமணி இராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இன்று அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "கரூரில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த வட்டார மோட்டார் வாகன ஆய்வாளர் மீது வேன் ஒன்று மோதிவிட்டு நிற்காமல் சென்றதில் அவர் உயிரிழந்தார் என்ற செய்தியறிந்து வேதனை அடைந்தேன். அவரது குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
வட்டார மோட்டார் வாகன ஆய்வாளர் மீது வேன் மோதியது விபத்தா அல்லது திட்டமிட்ட கொலையா? என்பது குறித்து விரிவான விசாரணை நடத்தி உண்மையை வெளிக்கொண்டு வர வேண்டும். குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை பெற்றுத்தர வேண்டும்.
திருச்சி அருகே ஆடு திருடர்களைப் பிடிக்கச் சென்ற காவல் அதிகாரி பூமிநாதன் வெட்டிக் கொல்லப்பட்ட அதிர்ச்சி விலகும் முன்பே அடுத்த நிகழ்வு நடந்திருப்பது கவலையளிக்கிறது. ஆபத்தான சூழலில் பணியாற்றும் அதிகாரிகளின் பாதுகாப்பை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்." என்று மருத்துவர் அன்புமணி இராமதாஸ் தெரிவித்துள்ளார்.
English Summary
Dr Anbumani Ramadoss Mourning To karur police inspector murder