திமுக கொடுத்த நம்பிக்கையில்லா தீர்மானம் நோட்டிஸ்! நடக்கப்போவது என்ன?!
dmk non confidential notice about the assembly speaker
சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர திமுக நோட்டிஸ் கொடுத்துள்ளதால் அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு அனைவருக்குமே உள்ளது. தினகரன் ஆதரவு எம்எல்ஏ க்கள் மூவரை தகுதி நீக்கம் செய்ய சபாநாயகர் நோட்டிஸ் கொடுக்க, அதனை எதிர்த்து திமுக சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தது.
இடைத்தேர்தலுக்கு பின்னர் திமுக ஆட்சி அமைய வாய்ப்பு ஏற்படும் என்ற நம்பிக்கையில் திமுக அப்படி ஒரு நடவடிக்கையை எடுத்தது. ஆனால் இடைத்தேர்தல் முடிவு திமுகவிற்கு எதிராக முடிந்ததால் திமுகவின் ஆட்சி கனவு கலைந்து போனது. தற்போது திமுக என்ன செய்யும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
சட்டப்பேரவை விதி எண் 179 C யின்படி ஒரு சபாநாயகர் / துணை சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர 14 நாட்களுக்கு முன்பே நோட்டிஸ் கொடுத்திருக்க வேண்டும். அந்த நோட்டிஸ் சட்டசபை கூடும் முதல் நாளில் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படும்.
சபாநாயகர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தை சபாநாயகரே வாக்கெடுப்பிற்கு விட மாட்டார். அத்தீர்மானம் அவையில் எடுத்துக்கொள்ளப்படும்போது சபாநாயகர் அவையை விட்டு வெளியேறிவிடுவார். துணை சபாநாயகர்தான் அவையில் இத்தீர்மானத்தை வாசித்து அதை முன்மொழிபவர்களை எழுந்து நிற்க சொல்வார். குறைந்தது 35 சட்டமன்ற உறுப்பினர்களாவது எழுந்து நின்றால்தான் சபாநாயகர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் அதிகாரப்பூர்வமாக எடுத்துக்கொள்ளப்பட்டு வாக்கெடுப்பிற்கு விடப்படும்.
35 உறுப்பினர்கள் சட்டசபையில் நம்பிக்கையில்லா தீர்மானத்தை முன்மொழியாதவரை அது வெறும் சாதாரண நோட்டிஸ்தான். இந்த கட்டம் வரை திமுக வெற்றிகரமாக வந்துவிடும். அதன்பின் தற்போது சட்டசபையில் திமுக 101, காங்கிரஸ் 8, முஸ்லீம் லீக் 1 என மொத்தம் 110 சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளனர் இதில் நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினர் வசந்தகுமார் தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்யப்போவதாக அறிவித்துள்ளார். அவர் ராஜினாமா செய்தால் சட்டசபையில் திமுக கூட்டணியின் பலம் 109 இடங்களாக குறையும். அதிமுகவின் பலம் 123 ஆக உள்ளது.
இதன்மூலம் சபாநாயகர் மீது திமுக கொண்டுவர உள்ள நம்பிக்கையில்லா தீர்மானம் 100% தோல்வி அடையும் என்ற நிலை உள்ளதால் திமுக நம்பிக்கையில்லா தீர்மானத்தை வலியுறுத்துமா அல்லது சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை வாபஸ் வாங்குமா என்பதை அடுத்த மாதம் கூடவிருக்கும் தமிழக சட்டசபையில் தெரிந்துவிடும்.
English Summary
dmk non confidential notice about the assembly speaker