வேளாண்மசோதா கடும் எதிர்ப்பு! மாநிலங்களவையில் திமுக எம்பி ஆவேச உரை!
DMK MP AGAINST AGREE BILL
வேளாண் விளை பொருள் வர்த்தக மசோதா, விவசாயிகளின் விளைபொருள்களுக்கு உரிய விலை கிடைக்க உத்தரவாதம் அளிக்கும் மசோதா, அத்தியாவசிய பொருட்கள் திருத்த மசோதா ஆகிய மூன்று மசோதாக்களும் நாடாளுமன்ற மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பபட்டன. இந்த மசோதாவுக்கு எதிராக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், மூன்று மசோதாக்ககளும் இன்று மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்படவுள்ளதால் பாஜக எம்.பிக்கள் எல்லாரும் தவறாமல் அவைக்கு வர வேண்டும் என பாஜக கொறடா உத்தரவிட்டார். இந்த மசோதா நிறைவேறுவதற்கு 122 எம்.பிக்களின் ஆதரவு தேவை என்ற நிலையில், பாஜகவுக்கு 135 எம்.பிக்களின் ஆதரவு இருப்பதால் இந்த சட்டமசோதாக்கள் நிறைவேறும் என பாஜக நம்பிக்கையுடன் உள்ளது.
இன்று கூடியிருக்கும் மாநிலங்களவையில் மத்திய வேளாண் துறை சம்பந்தமான 3 வேளாண் மசோதாக்களையும் அமைச்சர் நரேந்திரசிங் தோமர் தாக்கல் செய்துள்ளார். இந்த மசோதாவிற்கு பாஜகவின் கூட்டணிக் கட்சியான சிரோமணி அகாலிதளம் மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், வேளாண் மசோதாவுக்கு மாநிலங்களவையில் திமுக கடும் எதிர்ப்பு தெரிவித்து பேசி வருகிறது. திமுக எம்பி டி.கே.எஸ்.இளங்கோவன் பேசிய உரையில், "வேளாண் மசோதா விவசாயிகளின் நலனுக்கு எதிரானது. மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் மசோதா தேவையில்லாதது. கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு விவசாயிகள் அடிமைகளாகும் நிலை உருவாகும். விவசாயிகள் வேளாண் உற்பத்திப் பொருட்களை விற்பனை செய்வதற்காக இந்த மசோதா இல்லை.
வேளாண் மசோதா விவசாயிகளுக்கு ஏற்படுத்தப்பட்ட மிகப்பெரிய அவமதிப்பு. தற்போது இந்த மசோதாவை கொண்டு வர வேண்டிய அவசியமே இல்லை. வேளாண்மை மாநில அரசின் பட்டியலில் இருப்பதால் மத்திய அரசுக்கு சட்டம் கொண்டுவர அதிகாரமே இல்லை" என்று டி.கே.எஸ். இளங்கோவன் திமுக சார்பாக தனது உரையில் எதிர்ப்பை தெரிவித்துள்ளார்.
English Summary
DMK MP AGAINST AGREE BILL