பணமோசடி வழக்கில் திமுகவின் முக்கிய புள்ளிக்கு சிறைத்தண்டனை.! அதிரடி தீர்ப்பு.!
dmk mathiyalakan case
கடன் பெற்றுத் தருவதாக கூறி பண மோசடி செய்த திமுகவின் வேப்பூர் ஒன்றிய செயலாளர் உட்பட 2 பேருக்கு, சிறைத் தண்டனை விதித்து பெரம்பலூர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.
பெரம்பலூர் மாவட்டம், எறையூரை சேர்ந்தவர் ராஜமாணிக்கம். இவர் கடந்த 12 ஆண்டுகளுக்கும் முன் மினி லாரி ஒன்று வாங்க முடிவு செய்தார். தனது கையில் உள்ள காசு போக, மீதமுள்ள தொகைக்கு வங்கியில் கடன் வாங்கலாம் என்றும் திட்டமிட்டார்.
இதனையடுத்து அதே ஊரை சேர்ந்த பெரியசாமி மகன் அசோகன் (வயது 62) என்பவரிடம் கேட்டுள்ளார். அப்போது அசோகன் 1.62 லட்சம் ரூபாய் பணம் முன்பணமாக கட்டினால் உங்களுக்கு வங்கியில் கடன் பெற்றுத் தருவதாக தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து அசோகனிடம் 1.62 லட்சம் ரூபாய் பணத்தை ரொக்கமாக ராஜமாணிக்கம் கையில் கொடுத்துள்ளார். ஆனால், பணம் கொடுத்து ஒரு ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் அசோகன் வங்கியில் கடன் பெற்றுத் தரவில்லை. இதனையடுத்து தான் கொடுத்த பணத்தை திருப்பித் தருமாறு கேட்டுள்ளார்.
இது சம்பந்தமாக கடந்த 2000 ஆம் ஆண்டு அந்த ஊர் தலைவர்கள் முன்னிலையில் பஞ்சாயத்து நடைபெற்றது. அப்போது அசோகனுக்கு ஆதரவாக வேப்பூர் வடக்கு ஒன்றிய திமுக செயலாளராக இருக்கும் மதியழகன் (வயது 50) என்பவர் ஆஜராகி, அசோகன் வாங்கிய பணத்தை ஒரு மாதத்தில் திருப்பிக் கொடுத்து விடுவார் என்றும், அவர் கொடுக்கவில்லை என்றால், எனது வீட்டை அடமானம் வைத்து அந்த பணத்தை தருவதாகவும் உறுதி அளித்து, பத்திரத்தில் கையொப்பமிட்டு கொடுத்தார்.
அதன் பிறகு ஒரு வருடம் இவர்கள் பணத்தை திருப்பிக் கொடுக்கவில்லை. இதனையடுத்து கடந்த 2001ஆம் ஆண்டு ராஜமாணிக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரை பெற்றுக்கொண்ட மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் அசோகன், மதியழகன் ஆகியோர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.
இந்த வழக்கை பெரம்பலூர் ஜெஎம் ஒன்று நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், நேற்று இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, குற்றம் சாட்டப்பட்ட அசோகனுக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், 20 ஆயிரம் அபராதமும் விதித்தார். மதியழகனுக்கு ஓராண்டு சிறைத் தண்டனையும், 10 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.
மேலும், இந்த தீர்ப்பின் மேல்முறையீடு செய்வதற்கு அவகாசம் வழங்கும் வகையில், சிறைத்தண்டனையை வரும் அக்டோபர் மாதம் 21ஆம் தேதி வரை நிறுத்தி வைப்பதாகவும் தீர்ப்பு வழங்கி, இந்த வழக்கின் போது நீதிமன்றத்தில் ஆஜராகாத மதியழகனுக்கு பிணையில் வரமுடியாத வாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டார்.