நாங்குநேரி தொகுதியில் யார் போட்டி! ஸ்டாலின் அளித்த சுவாரசியமான பதில்!
dmk leader stalin press meet in nellai
"முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இருப்பது அதிமுக அமைச்சரவை அல்ல - சுற்றுலா அமைச்சரவை என்றும், உலக முதலீட்டாளர் மாநாடுகளில் அறிவித்த ரூ.5.42 லட்சம் கோடி முதலீடுகள் பற்றி வெள்ளை அறிக்கை வெளியிடாமல் பொழுதுபோக்காக சுற்றுலா சென்றுள்ளனர்" எனவும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இன்று நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்த ஸ்டாலின், செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார். அதில் வங்கிகள் ஒருங்கிணைப்பு குறித்து நிர்மலா சீதாராமன் அவர்கள் கூறியுள்ள கருத்து பற்றி தெரிவிக்கையில், வங்கிகள் ஒருங்கிணைப்பு குறித்து, வங்கியில் பணிபுரிந்துக் கொண்டிருக்கும் ஊழியர்கள் எதிர்ப்பைக் காட்டியிருக்கிறார்கள். எனவே, தொடர்ந்து என்ன நடக்கவிருக்கிறது என்பதை கூர்ந்து கவனிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
அடுத்து, முதலமைச்சர் தனியாகவும், அமைச்சர்கள் தனியாகவும் வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டுள்ளார்கள். அதை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்? என கேட்ட போது அதற்கு, முதலமைச்சர் உள்ளிட்ட 10 அமைச்சர்கள் வெளிநாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளனர். மேலும், 8 அமைச்சர்கள் சுற்றுப்பயணம் செல்லப்போவதாகவும் செய்திகள் வந்துகொண்டிருக்கிறது.
ஏற்கனவே, இந்த ஆட்சியில் கடந்த 8 ஆண்டுகாலத்தில் இரண்டு உலக முதலீட்டாளர் மாநாடு நடந்திருக்கிறது. அந்த உலக முதலீட்டாளர்கள் மாநாடுகள் மூலம் 5.42 லட்சம் கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், இதுவரையில் அது என்ன நிலையை - எப்படிப்பட்ட சூழ்நிலையை அடைந்திருக்கின்றது என்பது பற்றி, ஒரு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டுமென்று தொடர்ந்து நாங்கள் குரல் கொடுத்துக் கொண்டிருக்கிறோம். நாட்டு மக்களும் அதைத்தான் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
ஆனால், அதுகுறித்து எந்த அக்கறையும் எடுத்துக்கொள்ளாமல் வெளிநாட்டிற்கு ஏதோ பொழுதுபோக்குக்காக செல்வதுபோல் சென்றுள்ளனர். இன்னும் சொல்லவேண்டும் என்றால் எடப்பாடி பழனிசாமி அவர்கள் தலைமையில் இருக்கும் அமைச்சரவையை, அ.தி.மு.க அமைச்சரவை என்று சொல்ல முடியாது, சுற்றுலா அமைச்சரவைதான் என்று சொல்லவேண்டிய நிலையில் இன்றைக்கு இந்த ஆட்சி நடந்துகொண்டிருக்கிறது என தெரிவித்தார்.
நாங்குநேரி இடைத்தேர்தலில் காங்கிரஸ் தலைமை சம்மதித்தால் போட்டியிடத் தயார் என்று குமரி அனந்தன் அவர்கள் சொல்லியிருக்கிறார். அதுகுறித்து உங்கள் கருத்து என்ன? என கேட்ட போது, அவரவர் விருப்பத்தை, அவர்கள் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். தேர்தல் தேதி அறிவித்ததற்குப் பிறகு தி.மு.க தலைமையும், காங்கிரஸ் தலைமையும் கலந்துப்பேசி அதற்குப் பிறகு முடிவு அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
English Summary
dmk leader stalin press meet in nellai