அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ் .பி. வேலுமணி மீது விசாரணை.! தமிழக அரசு அறிவிப்பு.!
dmk case against s p velumai for tender issue
முன்னாள் அமைச்சரும், அதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவருமான வேலுமணி மீதான டெண்டர் முறைகேடு புகார் குறித்து விசாரணை நடத்தப்படும் என்று, சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
கொங்கு மண்டலத்தின் முக்கிய தலைவர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் அதிமுகவின் முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி. இவருக்கு எதிராக தற்போதைய தமிழக முதல்வர் முக ஸ்டாலின், திமுக சார்பாக பெரும் போராட்டத்தையே நடத்தியிருந்தார். மேலும் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணிக்கு எதிராக திமுக பல்வேறு புகார்களை தெரிவித்து, அவருக்கு எதிராகப் போராட்டங்களை நடத்தியது.
இந்த நிலையில், அதிமுக ஆட்சியில் உள்துறை அமைச்சராக இருந்த எஸ் பி வேலுமணிக்கு எதிராக, திமுக மற்றும் அரப்போர் இயக்கம் சார்பாக, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடரப்பட்டது.
அந்த வழக்கில், மாநகராட்சி டெண்டர் நடைமுறைகளில் முறைகேடு நடந்துள்ளதாகவும், அமைச்சர் வேலுமணி நெருக்கமானவர்களுக்கு டெண்டர் அளிக்கப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரிடம் புகார் அளித்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில், இந்த வழக்கு தலைமை நீதிபதி அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், "கணக்குத் தணிக்கை அறிக்கைகள் இழப்பு நடந்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புகாரில் முகாந்திரம் இருக்கும்பட்சத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தப்படும்" என்று, தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து இந்த வழக்கை ஆகஸ்ட் மாதம் இரண்டாவது வாரத்தில் ஒத்திவைத்து சென்னை உயர்நீதிமன்றம் நீதிபதி உத்தரவிட்டார்.
English Summary
dmk case against s p velumai for tender issue