தமிழக முதல்வர், அமைச்சர்களுக்கு எதிரான வழக்கு., சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு.!
dmk appavu case
நியாய விலைக் கடைகளில் கூடுதல் அரிசி வழங்கியது மற்றும் எல்இடி விளக்குகள் வாங்கியதில் ஊழல் நடைபெற்றுள்ளதாக, தமிழக முதல்வர் மற்றும் அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி, உயர் நீதிமன்றத்தில், திமுக முன்னாள் எம்எல்ஏ அப்பாவு மனு தாக்கல் செய்துள்ளார்.
அப்பாவு தாக்கல் செய்த அந்த மனுவில், "கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த மார்ச் 24-ஆம் தேதி முதல் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டது. இதனால் பொதுமக்கள் வாழ்வாதாரத்தை இழந்ததால், ஒரு குடும்பத்தில் உள்ள ஒவ்வொரு நபருக்கும் தலா 5 கிலோ அரிசி கூடுதலாக வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்தது. இதற்காக ஒவ்வொரு மாநிலத்துக்கும் இந்திய உணவு கழகம் மூலமாக அரிசியை அனுப்பி வைத்தது.
மத்திய அரசு உத்தரவின்படி குடும்ப அட்டையில் உள்ள உறுப்பினர்களுக்கு தலா 5 கிலோ அரிசி வழங்குவதற்குப் பதில், குடும்ப அட்டைக்கு 5 கிலோ அரிசி மட்டும் வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள அரிசி அமைச்சருக்கு நெருக்கமானவர்கள் மூலம் நவீன அரிசி ஆலைகளுக்கு அனுப்பி ரேசன் அரிசியை பாலீஷ் செய்து ஒரு கிலோ 20 ரூபாய் முதல் 30 ரூபாய் வரை விற்பனை செய்ததாகப் புகார் எழுந்தது.
மத்திய அரசிடம் பெற்ற ரேசன் அரிசியை பொதுமக்களுக்கு வழங்காமல் முறைகேடாக விற்ற விவகாரத்தில் அமைச்சர் காமராஜ் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கக் கோரி கடந்த ஜூலை மாதம் 15-ஆம் தேதி லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் கண்காணிப்பு துறை இயக்குநரிடம் புகார் அளித்தேன். ஆனால் உரிய நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்தி வருகின்றனர். எனவே முதல்வர் மற்றும் அமைச்சர் காமராஜ் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட வேண்டும்" என்று தெரிவித்து இருந்தார்.
மேலும், எல்இடி விளக்குகள் வாங்கியதில் சுமார் ரூ.500 கோடி வரை ஊழல் செய்ததாக அமைச்சர் வேலுமணிக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி தனியாக ஒரு மனுவையும் அவர் தாக்கல் செய்திருந்தார்.
இந்நிலையில் இந்த மனுக்களை இன்று விசாரணை செய்த சென்னை உயர்நீதிமன்றதில், அப்பாவு தரப்பில், "பொதுத்துறை செயலாளர் அமைச்சரவையின் கட்டுப்பாட்டில் உள்ளதால் முதல்வர் மற்றும் அமைச்சர்களுக்கு எதிராகச் செயல்பட மாட்டார். எனவே தமிழக முதல்வர் மற்றும் அமைச்சர்கள் மீது வழக்குப் பதிவு செய்ய, ஆளுநரின் ஒப்புதலைப் பெற லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உத்தரவிட வேண்டும்" என்று வாதிடப்பட்டது.
இதனையடுத்து நீதிபதிகள் இந்த வழக்கின் விசாரணை வரும் ஜனவரி மாதம் 6-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.