வெளியே வருகிறார் சசிகலா! தொடங்கிய நடவடிக்கைகள்! பரபரப்பாகும் அரசியல் களம்!
dhinakaran speak about sasikala release
தஞ்சாவூர் பாராளுமன்ற தொகுதி வேட்பாளராக அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் போட்டியிட்ட முனைவர் பொன்.முருகேசன் இல்லத் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மணமக்களை அக்கட்சியின் பொதுச்செயலாளர் தினகரன் வாழ்த்தினார்.
சொத்து குவிப்பு வழக்கில் சிறை தண்டனை பெற்று சிறையில் இருக்கும் சசிகலா, சிறைக்கு செல்லும் போது அதிமுகவின் துணைப் பொதுச் செயலாளராக தினகரனை நியமித்து சென்றார். ஆனால் அவரை ஓரங்கட்டிய ஓபிஎஸ் இபிஎஸ் அணியினர் அதிமுகவை தற்போது வழிநடத்தி வருகிறார்கள். அவர்களை எதிர்த்து தனிக் கட்சி நடத்திய தினகரன் சசிகலாவை பொதுச் செயலாளராகவும், அவரை துணைப் பொதுச் செயலாளராகவும் அறிவித்திருந்தார்.
இதற்கிடையே நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் கட்சியின் அங்கீகாரம், சின்னம் உட்பட பல பிரச்சினைகளில் சிக்கி கொண்டதால் கட்சியின் பொதுச் செயலாளர் பொறுப்பை தினகரனே ஏற்றுக்கொண்டார். நடைபெற்று முடிந்த தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் எதிர்பார்த்த வெற்றியை, வாக்கு வங்கியை தக்க வைக்காததால், அக்கட்சியிலிருந்து பலர் வெளியேறி மீண்டும் அதிமுகவில் இணைந்து வருகிறார்கள்.
இந்நிலையில் இன்று தஞ்சையில் திருமண விழா ஒன்றில் கலந்து கொண்ட தினகரன், சசிகலா விரைவில் வெளியே வருவதற்கான சட்டப்பூர்வமான நடவடிக்கைகள் நடைபெற்று வருவதாகவும், விரைவில் அவர் வெளியே வருவார் என நம்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். சசிகலா சிறையில் இருந்து வெளியே வந்தால், அதிமுகவினர் என்ன முடிவெடுப்பார்கள்? அதிமுகவில் சேர்ப்பாளர்களா? அல்லது சசிகலா தினகரன் கட்சியில் இணைந்து செயல்படுவாரா? என பல எதிர்பார்ப்புகள் இருக்கின்றது.
ஏனெனில் அதிமுகவில் இருக்கும் பல தலைவர்கள் சசிகலாவால் அடையாளம் காட்டப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே சசிகலா சிறை தண்டனை முடியும் முன்பே நன்னடத்தை விதிகளின் படி வெளியே வருவார் என்ற தகவல் வெளியாகியிருந்த நிலையில், தற்பொழுது தினகரன் அறிவித்திருப்பது பரபரப்பைக் கூட்டியுள்ளது.
English Summary
dhinakaran speak about sasikala release