கருணாநிதி பாணியில் தினகரன் வெளியிட்ட புதிய அறிவிப்பு!! தயாரான தொண்டர்கள்!!
dhinakaran release a letter
நாளை நமதே நாற்பதும் நமதே என மறைந்த திமுக தலைவர் கருணாநிதி பாணியில், அமமுக கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், அவரது கட்சி தொண்டர்களுக்கு கோரிக்கை ஒன்றை விடுத்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார், அதில், " தமிழக அரசியல் வரலாற்றில் புதியதோர் அத்தியாத்தை நாம் படைக்க உள்ளோம். நெருக்கடிகள், அழுத்தங்கள், பொய் வழக்குகள் இவை அத்தனையையும் எதிர்கொண்டு, ஜெயலலிதாவின் தூய தொண்டர்களாக, ஜெயலலிதாவை போலவே எதற்கும் அஞ்சாமல் முன்னேறிச் சென்று தமிழகம், புதுச்சேரி உள்பட 39 நாடாளுமன்ற தொகுதிகளிலும், சட்டமன்ற இடைத்தேர்தல்களிலும் நாம் தனி முத்திரை பதித்துள்ளோம்.
சுயேச்சைகள் என்ற அளவுக்கு அதிகார வர்க்கம் தள்ளியபோதும், நாட்களை கடத்தி நமக்கு ‘பரிசு பெட்டகம்’ சின்னத்தை வழங்கிய நிலையிலும் பிரசார களத்தில் முதன்மையாக திகழ்ந்தது நாம் தான். அரசியல் வரலாற்றில் எந்த ஓர் அமைப்புக்கும் ஏற்படாத நெருக்கடிகளை நாம் சந்தித்தோம். எதிரிகளின் சூழ்ச்சி ஏற்படுத்திய அழுத்தங்களுக்கு ஆட்படாமல், ஏறுமுகம் கொண்டு வீறுகொண்ட வேங்கைகளாய் களம் கண்டோம்; களம் வெல்லப்போகிறோம்.
நமக்குத்தான் மக்களின் ஆதரவு என்பதை ஒவ்வொரு கணத்திலும் உணர முடிந்தது. 4 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலிலும் நாமே முன்னணியில் நிற்கிறோம். ‘இப்படை தோற்கின் எப்படை வெல்லும்’ என்பதை நாம் நிரூபிக்கப்போகிறோம். தேர்தல் முடிந்த பிறகு மே 23-ல் தமிழக அரசியல் ஒரு புதிய தொடக்கத்தை காணப்போகிறது. துரோக கும்பலை அப்புறப்படுத்தப்போகிறது.
மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி மாற்றம் நிகழப்போகிறது. அந்தளவுக்கு துரோக கும்பலை தமிழக மக்கள் அருவெறுப்பாக பார்க்கிறார்கள். ஆகையால், இந்த 4 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் நம்முடைய முழு உழைப்பை அர்ப்பணித்திடுவோம். கவனம் சிதறாமல் ஒவ்வொரு வாக்கையும் பரிசு பெட்டகத்துக்கு கொண்டு வந்து சேர்ப்போம்.
தமிழகத்துக்கும், தமிழக மக்களுக்கும் துரோக கும்பல் செய்த அக்கிரமத்துக்கும், ஏற்றிவிட்ட ஏணியை எட்டி உதைத்த பெரும் துரோகத்துக்கும் சரியான பாடம் கிடைக்கப்போகிறது. உங்கள் ஒவ்வொருவரின் உழைப்பின் வலிமையால் அது சாத்தியமாகப் போகிறது. ஜெயலலிதாவின் கொள்கைகள் வாழவேண்டும்.
துரோகம் தோற்கவேண்டும் என்ற நம்முடைய எண்ணம் ஈடேறும் நாள் அருகில் வந்துவிட்டது. நாம் வெற்றி கோட்டினை தொட இருக்கிறோம். மே 23-ஐ துரோகம் ஒழிக்கப்பட்ட நாளாக தமிழ் கூறும் நல்லுலகம் கொண்டாட இருக்கிறது. ஆம் நாளை நமதே!
English Summary
dhinakaran release a letter