நிவாரணப் பணிகளை துரிதப்படுத்துங்க... தமிழக அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்!!
cpm report for nilagiri
தமிழகத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதிகளில் தற்போது கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக நீலகிரி மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் பவானி அணை, பில்லூர் அணை நிரம்பியுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, கூடலூர், பந்தலூர், குந்தா ஆகிய பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக மழை வெளுத்து வாங்கி வருகிறது. இது நீலகிரி மாவட்டத்தில் கடந்த 101 ஆண்டுகளுக்கு இல்லாத அளவிற்கு கனமழை பெய்து வருகிறது.
இந்நிலையில், இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை வெளியிட்டுள்ளது. தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து நீலகிரி மாவட்டத்தில் வரலாறு காணாத மழை பெய்து வெள்ளம், நிலச்சரிவு, போக்குவரத்து பாதிப்புகள் ஏற்பட்டு மக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகியுள்ளனர். குறிப்பாக, கூடலூர், பந்தலூர் தாலுக்காக்களில் பொதுமக்களின் அன்றாட வாழ்வு பெரிதும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது. இதுவரை 10 பேர் உயிரிழந்துள்ளனர். சுமார் 20க்கும் மேற்பட்ட நிவாரண மையங்களில், ஏராளமான குழந்தைகள், பெண்கள் உள்பட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். விவசாய சாகுபடிகள் பெரிதும் அழிந்துள்ளன.
தமிழக அரசு உடனடியாக இம்மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கிடவும், பாதிக்கப்பட்ட விவசாய நிலங்கள் மற்றும் பயிர்கள், சேதமடைந்த வீடுகள், மரங்கள் உள்ளிட்டவைகளை கணக்கெடுத்து உரிய நட்ட ஈடு வழங்கிட வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வற்புறுத்திக் கேட்டுக் கொள்கிறது.
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு போர்வைகள், துணிமணிகள், வீட்டு பொருட்கள் உள்ளிட்டவைகளை சேகரித்து நீலகிரி மாவட்டத்திற்கு அனுப்பி வைக்க வேண்டுமென கட்சியின் மாவட்டக்குழுக்களை மாநில செயற்குழு கேட்டுக் கொள்கிறது. நீலகிரி மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்க பணிகளில் முழுமையாக ஈடுபட வேண்டுமென கட்சி தோழர்களை கேட்டுக் கொள்கிறோம் என்று அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.