ஈரோடு கிழக்கில் திமுகவின் மாஸ்டர் பிளான்.. ஒரே மேடையில் மூன்று தலைவர்கள் பிரசாரம்...!!
Congress DMK MNM leaders campaign on one stage for Erode East byelection
ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் வரும் பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் நாளை மறுநாள் தொடங்க உள்ள நிலையில் திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சிக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டதால் வேட்பாளராக ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் அறிவிக்கப்பட்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து பல்வேறு கூட்டணி கட்சி தலைவர்களை சந்தித்த இளங்கோவன் ஆதரவு திரட்டினார். மேலும் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனை நேரில் சந்தித்து ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்கு ஆதரவு கோரியிருந்தார்.
இதனைத் தொடர்ந்து கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய கமலஹாசன் ஈ.வி.கே.எஸ் இளங்கோவனுக்கு ஆதரவு அளிப்பதாக அறிவித்தார்.
காங்கிரஸ் வேட்பாளர் இளங்கோவனை ஆதரித்து திமுகவின் கூட்டணி கட்சிகள் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றன. திமுக சார்பில் 11 அமைச்சர்கள் கொண்ட தேர்தல் பணி குழு நியமிக்கப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் ஈரோடு கிழக்கு தொகுதியில் வீடு வீடாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் முதல்வர் மு.க ஸ்டாலின் பிரச்சாரம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதேபோன்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலஹாசனும் இளங்கோவனை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். மேலும் பிப்ரவரி 2வது வாரத்தில் ஈ.வி.கே.எஸ் இளங்கோவனை ஆதரித்து முதல்வர் ஸ்டாலின், அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மநீம தலைவர் கமலஹாசன் மற்றும் திமுக கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் இணைந்து பிரம்மாண்ட பொதுக் கூட்டத்தில் பிரச்சாரம் செய்ய உள்ளனர். இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
English Summary
Congress DMK MNM leaders campaign on one stage for Erode East byelection