மின்சாரம் தாக்கி பலி., 5 லட்சம் அறிவித்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவு.!
CM STALIN announce
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே குளக்கரை பகுதியில், கனரக லாரி ஒன்று அதிவேகமாக சென்றுள்ளது. அப்போது அப்பகுதியில் உள்ள மின் கம்பத்தில் இருந்து ஒரு வீட்டுக்கு சென்ற மின் இணைப்பு ஓயரை அறுத்துவிட்டு சென்றுள்ளது. (25-8-2021 அன்று காலை நேரம்)
இதனை அறியாமல் அவ்வழியாக சென்ற தில்லைவிடங்கன் பகுதியை சேர்ந்த சிங்காரவேல் என்ற முதியவர், அந்த மின் கம்பி மீது இடறி விழுந்து, மின்சாரம் பாய்ந்து, அந்த இடத்திலேயே மயங்கி உள்ளார். அவரை காப்பாற்றுவதற்காக அதே பகுதியை சேர்ந்த இளைஞர் அரவிந்தன் (பொறியியல் பட்டதாரி) என்பவர் முயற்சி செய்துள்ளார். அப்போது அவர் மீது மின்சாரம் பாய்ந்து, சம்பவ இடத்திலேயே அவரும் மயங்கி கீழே விழுந்துள்ளார்.
இதனை பார்த்த அந்த பகுதி மக்கள், உடனடியாக அவர்களை மீட்டு அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால், அவர்களை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இந்நிலையில், குளக்கரையில் மின்சாரம் பாய்ந்து இறந்த 2 பேரின் குடும்பத்துக்கு தலா 5 லட்சம் ரூபாய் நிதி வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிவிப்பில்,
"மயிலாடுதுறை மாவட்டம் திட்டை ஊராட்சி குளக்கரை என்ற இடத்தில் மின்சார ஒயர் பட்டுத் தில்லைவிடங்கன் கிராமம், கன்னிக்கோயில் தெருவில் வசிக்கும் சிங்காரவேலு, த/பெ.சின்னத்தம்பி என்பவரும், திட்டை கிராமம், குளக்கரை தெருவில் வசிக்கும் அரவிந்த், த/பெ. லூர்துசாமி என்பவரும் மின்சாரம் தாக்கி உயிரிழந்தனர் என்ற துயரச் செய்தியை அறிந்து நான் மிகவும் வேதனை அடைந்தேன்.
இந்தத் துயரச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதோடு, உயிரிழந்த இருவரின் குடும்பத்தினருக்குத் தலா ஐந்து இலட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து உடனடியாக வழங்க உத்தரவிட்டுள்ளேன்." என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.