ஜல்லிக்கட்டில் இந்த மாடுகளுக்கு அனுமதியில்லை.! சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.!
chennai hc order for jallikattu bull
ஜல்லிக்கட்டு போட்டிகளில் நாட்டு மாடுகளுக்கு மட்டுமே பங்கேற்க அனுமதிக்க வேண்டும் என்றும், கலப்பின மாடுகளை அனுமதிக்கக் கூடாது என்றும் தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
சென்னையை சேர்ந்த சேசன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அவரின் அந்த மனுவில்,
"ஜல்லிக்கட்டு போட்டியில் நாட்டு இன மாடுகளை மட்டுமே அனுமதிக்க வேண்டும். வெளிநாடு மற்றும் கலப்பின மாடுகளை ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்பதற்கு தடை விதித்து உத்தரவிட வேண்டும். நாட்டு மாடுகளுக்கு பெரிய திமில்கள் இருக்கும் என்பதால், அதனை ஜல்லிக்கட்டு வீரர்கள் பிடிப்பதற்கு வசதியாக இருக்கும்.
அதே சமயத்தில் வெளிநாட்டு மாடுகள் மற்றும் கலப்பின மாடுகளுக்கு திமில்கள் இருப்பதை இல்லை. அப்படி இருந்தாலும் அவை சிறியதாக இருக்கும். இதனால் மாடுகள் எளிதில் வெற்றி பெற்று விடும். மேலும், ஜல்லிக்கட்டு வீரர்கள் அந்த மாடுகளை அடக்க முடியாத நிலை ஏற்படுகிறது" என்று அந்த மனுவில் தெரிவித்திருந்தார்.
இந்த வழக்கை இன்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கிருபாகரன், வேல்முருகன் ஆகியோர் விசாரணை செய்தனர். அப்போது, நீதிபதிகள் அளித்த உத்தரவில், "ஜல்லிக்கட்டு போட்டிகளில் நாட்டு மாடுகளுக்கு மட்டுமே பங்கேற்க அனுமதிக்க வேண்டும். வெளிநாடு மற்றும் கலப்பின மாடுகளை அனுமதிக்கக் கூடாது.
ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் மாடுகள் நாட்டு மாடுகள் தான் என்பதனை கால்நடை மருத்துவர்கள் சான்று அளிக்க வேண்டும். போலியான சான்றிதழ்கள் அளித்தால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
நாட்டு மாடுகள் இனப்பெருக்கத்திற்கு ஊக்கமளிக்கும் வகையில் அரசு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மாடுகளுக்கு செயற்கை கருத்தரிப்பு முறை தவிர்ப்பதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு எடுக்க வேண்டும்." என்று தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
English Summary
chennai hc order for jallikattu bull